மண்ணோடு மண்ணாக புதைந்துபோன மக்கள்... 600 கடந்த இறப்பு எண்ணிக்கை
பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவில் சிக்கி சுமார் 670 பேர் புதையுண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நினைத்ததை விட அதிகம்
பப்புவா நியூ கினியாவின் எங்க மாகாணத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவின் தாக்கம் ஆரம்பத்தில் நினைத்ததை விட அதிகமாக இருந்தது என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
150க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மொத்தமாக புதையுண்டுள்ளது. மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பதிலும் சிக்கல் நீடிப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, நிலத்தில் விரிசல் ஏற்படத் தொடங்கிய பின்னர், நிலச்சரிவால் நேரடியாகப் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள 250 வீடுகளை உள்ளூர்வாசிகள் கைவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சுமார் 4,000 மக்கள் அப்பகுதியில் குடியிருந்து வருகின்றனர். ஆனால் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே களத்தில் பணியாற்றும் அவுஸ்திரேலிய தொண்டு நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
பேரழிவின் விளைவாக குறைந்தது 1,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். அத்துடன் அறுவடைக்கு தயாரான விளைநிலங்கள் மற்றும் நீர் விநியோகம் கிட்டத்தட்ட முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது.
வன்முறை சம்பவங்களும்
மக்கள் ஆழ்ந்த நித்திரையில் இருந்த நேரம், உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய தொண்டு நிறுவன நிர்வாகிகள் தெரிவிக்கையில், நிலச்சரிவினால் இறந்தவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை, சில காலம் தாமதமாகலாம் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
ஞாயிறன்று 5 பேர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், உடல்களை மீட்பதிலும் பல்வேறு சவால்கள் இருப்பதாக கூறுகின்றனர். பிரதான சாலையில் பூர்வகுடி மக்களின் வன்முறை சம்பவங்களும் நிவாரணப் பணிகளை சிக்கலாக்குவதாக கூறுகின்றனர்.
நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் மக்களே உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்கத் தொடங்கியுள்ளனர். திங்கட்கிழமை முதல் உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரப் பொருட்கள் உள்ளிட்ட உதவிகளை மாகாண அதிகாரிகள் முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பப்புவா நியூ கினியாவில் 11.7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் குடியிருக்கின்னர். சுமார் 850 வட்டார மொழிகள் பேசப்படுகின்றன. மொழியியல் ரீதியாக பூமியிலேயே மிகவும் வேறுபட்ட நாடு இதுவென உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |