ஜேர்மனியில் நிரந்தர பொதுமுடக்கம்?... அறிவியலாளர் எச்சரிக்கை
ஜேர்மனியில் கொரோனா தொற்று பயங்கரமாக பரவிவரும் நிலையில், அதை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்த விவாதங்கள் தொடர்ந்தவண்ணம் உள்ளன.
வைராலஜி துறை நிபுணரான அறிவியலாளர் ஒருவர் இன்னும் நீண்ட காலத்துக்கு கடுமையான கட்டுப்பாடுகள் தேவை என்கிறார்.
ஜேர்மனியின் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், போதுமான அளவில் தடுப்பூசி திட்டமும் முன்னேற்றம் காணாமல், ஜேர்மனி கொரோனா பரவலை சமாளிக்க தடுமாறி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், ஜேர்மனியில் 25,464 பேர் புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், 296 பேர் உயிரிழந்துள்ளதாகவும் Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆக, ஜேர்மனிக்கு இன்னும் கடுமையான பொதுமுடக்கம் தேவைப்படுகிறதா? அல்லது தொற்று அதிகரிக்கும் நேரங்களில் மட்டும் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் போதுமா?
இப்படி பல கேள்விகள் மக்கள் மனங்களில் மட்டுமல்ல ஆட்சியாளர் மனங்களிலும்... சரி, அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரபல ஜேர்மன் வைராலஜி துறை அறிவியலாளரான Melanie Brinkmann கூறும்போது, ஏற்கனவே அறிவியலாளர்கள் பரவிவரும் திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் குறித்து எச்சரித்தும் யாரும் அதற்கு செவி கொடுக்கவில்லை. கட்டுப்பாடுகளை மக்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆக, இப்போதிருக்கும் நிலைமையைப் பார்த்தால், ஆண்டு முழுவதும் ஒரு நிரந்தர பொதுமுடக்கத்தில் இருக்கவேண்டிய ஒரு நிலைமைதான் உருவாகப்போகிறது என்கிறார்.