கொரோனாவுக்கு புற்றுநோய் மருந்து: கொத்தாக 200 பேர் மரணமடைந்த விவகாரத்தின் அதிர்ச்சி பின்னணி
பிரேசில் நாட்டில் பூர்வக்குடி மக்கள் உட்பட 200 பேர்கள் திடீரென்று மரணமடைந்த விவகாரத்தில் அதிர்ச்சி பின்னணி வெளியாகியுள்ளது.
பிரேசில் நாட்டில் புதியவகை மருந்து ஒன்றால் கொரோனாவை குணப்படுத்த முடியுமா என சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதில் பூர்வக்குடி மக்கள் உட்பட 200 பேர்கள் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
குறித்த சோதனையில் ஈடுபடுத்தப்பட்டவர்களில் இது 31 சதவீதம் என தெரிய வந்துள்ளது. உள்ளூர் பத்திரிகைகள் வெளியிட்ட தகவலில், மரணமடைந்த 200 பேர்களும் சிறுநீரகம் அல்லது கல்லீரல் செயலிழப்பு காரணமாகவே மரணமடைந்துள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மரணமடைந்த 200 பேர்கள் சார்பில் பொதுநல வழக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், புற்றுநோய்க்கான மருந்தால் கொரோனா தொற்றை குணப்படுத்த ,முடியுமா என்ற சோதனையே, கடுமையான மனித உரிமை மீறல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில், குறித்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்ட proxalutamide மருந்தானது புரோஸ்டேட் கட்டிகளுக்கு சிகிச்சையளிக்க முதலில் உருவாக்கப்பட்டது மற்றும் ஹார்மோன் விளைவுகளைத் தடுக்கவும் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அமேசான் பகுதி உட்பட சில இடங்களில் குறித்த மருந்தை சோதனை முயற்சியாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மருந்து உட்கொண்ட பலருக்கு கொரோனா தாக்கம் அதிகரித்ததுடன், உயிருக்கும் ஆபத்தாக முடிந்துள்ளது.
மொத்தம் 645 பேர்கள் குறித்த மருந்தை உட்கொண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் தாங்கள் மருத்துவரை நம்பியதாகவே தெரிவித்துள்ளனர்.