கட்டுக் கட்டாக கோடிக்கணக்கான பணம்! கோடீஸ்வரரின் கடும் கோபத்தால் நடந்த சம்பவம்: வெளியான புகைப்படங்கள்
சீனாவில் கோடீஸ்வரர் ஒருவர் வங்கி மீது கொண்ட அதிருப்தியால் தான் சேமித்து வைத்திருந்த தொகையில் சுமார் 5 மில்லியன் யுவான் தொகையை திரும்ப பெற்ற வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
சீனாவில் இருக்கும் சமூகவலைத்தளமான Weibo-வில் வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில் கட்டுக் கட்டுக்கணக்கான பணம் சூட்கேஸில் அடுக்கப்பட்டு, கார்களில் கொண்டு சென்று வைக்கப்படுவது போன்று இருந்தது.
அதன் பின் இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Sunwear(உண்மையான பெயர் இல்லை) என அறியப்படும் கோடீஸ்வரர் Hongmei சாலையில் உள்ள Bank of Shanghai வங்கிக்கு சென்றுள்ளார்.
அந்த வங்கியின் வாடிக்கையாளரான இவர், சம்பவ தினத்தன்று உள்ளே நுழைந்த போது, அங்கிருந்த பாதுகாவலர் அவரை முகக்கவசம் அணியும் படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் வெறுப்படைந்த அவர், இந்த வங்கியில் இருக்கும் தன் வாழ்நாள் முழு சேமிப்பையும் உடனடியாக கொடுக்கும் படி அங்கிருந்த வங்கி ஊழியர்களை வலியுறுத்தியுள்ளார்.
அதன் படி அன்று மட்டும் அவருக்கு சேமிப்பு தொகையில் இருந்து உள்ளூர் மதிப்பான 5 மில்லியன் யுவான்( இலங்கை மதிப்பில் 15,67,87,959 கோடி ரூபாய்) கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தொகையை அவர் சரியாக உள்ளதா என்பதை பார்ப்பதற்காக, வங்கி ஊழியர்களை கையிலே எண்ணும் படி கூறியுள்ளார். இதனால் இதற்கு சுமார் இரண்டு மணி நேரம் வங்கி ஊழியர்கள் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
மேலும், தன்னுடைய சேமிப்பில் உள்ள அனைத்து பணத்தையும் பெறும் போது அவர்கள் இதே போன்று கையால் எனக்கு எண்ணி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
எண்ணப்பட்ட பணம் முழுவதும் சூட்கேஸ்களில் அடுக்கி வைக்கப்பட்டு, அதன் பின் அவருடைய விலையுயர்ந்த காரில் வைக்கப்பட்டது.
இது குறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர் சேவை வழிகாட்டுதல்களை எந்த ஊழியர்களும் மீறவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.
ஆனால், அந்த பாதுகாவலர் அவர் மிரட்டியதே இவர் பணத்தை திரும்ப பெறுவதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அந்த கோடீஸ்வரரின் பெயர் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.