டெல்டா அச்சுறுத்தல்: இந்தியா மீதான பயணத் தடையை நீட்டித்த பிரபல நாடு
கொரோனா தொற்று காரணமாக இந்தியா உள்ளிட்ட 7 நாடுகளின் பயணிகளுக்கு ஜூன் 30 வரை தடை விதிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்திய விமானங்களுக்கு பல்வேறு நாடுகள் தற்காலிகத் தடை விதித்தன.
அதனைத் தொடர்ந்து டெல்டா வகை கொரோனா வைரஸ் (B.1617) காரணமாக தொற்று எண்ணிக்கை மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததால், அந்நாடுகள் டெல்டா வைரஸிலிருந்து தங்கள் மக்களை பாதுகாத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடர்ந்து இந்தியப் பயணிகளுக்கு தடை விதிக்கப்படுவதாக அறிவித்தன.
இந்நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலவி வரும் கொரோனா தொற்று சூழல் காரணமாக இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை ஜூன் 30-ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக பிலிப்பின்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள்ளாக பயணம் மேற்கொண்ட இதர நாட்டு பயணிகளும் பிலிப்பின்ஸ் நாட்டிற்குள் நுழைய தடை தொடரும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.