பிரித்தானிய ராணியார் மறைவுக்கு பிறகு தான் அவர் கணவர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்: கசிந்த தகவல்
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப்பின் உடல் இறுதிச் சடங்கிற்கு பிறகு பத்திரப்படுத்தப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.
பிரித்தானிய ராணியாரின் கணவர் இளவரசர் பிலிப் தமது 99வது வயதில், அவர் விருப்பத்தின்படியே, தனது சொந்த படுக்கையில் வைத்து காலமானார்.
தற்போது பிரித்தானியா முழுவதும் 8 நாட்கள் துக்கமனுசரிக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் சனிக்கிழமை இளவரசர் பிலிப்புக்கு இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இறுதிச் சடங்கிற்கு பிறகு இளவரசர் பிலிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்படாது எனவும்,
செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் அமைந்துள்ள அரச பரம்பரையினருக்கான பெட்டகத்தில் அவர் பூத உடல் உரிய மரியாதையுடன் பாதுகாக்கப்படும் என்ற தகவல் கசிந்துள்ளது.
மேலும், ராணியார் இரண்டாம் எலிசபெத் மறைவுக்கு பின்னர், இருவரது உடலும் ஒன்றாக நல்லடக்கம் செய்யப்படும் எனவும் அரண்மனை வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
இளவரசர் பிலிப்பின் உடல் ஜார்ஜ் சேப்பலில் அமைந்துள்ள பெட்டகத்தில் பாதுகாக்கப்படுவதற்கு முன்னர் அரச குடும்பத்து மருத்துவர்களால் விரிவான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
இளவரசர் பிலிப்பின் உடலை ஒரு சவப்பெட்டியில் வைத்து வின்ட்சர் கோட்டையில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு கொண்டு செல்வார்கள்.
அங்கே குடும்ப உறுப்பினர்களும், விசேட விருந்தினர்களும் தங்கள் இறுதி மரியாதையை செலுத்த உள்ளனர்.
இளவரசர் பிலிப்பின் இறுதி ஆசைக்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு மரியாதை எதுவும் செலுத்தப்படாது எனவும், மாறாக இராணுவ மரியாதை செலுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.