நடுவானில் செயலிழந்த விமானம்: 19 பயணிகளுடன் விமானியின் பதற வைக்கும் செயல்
நடுவானில் திடீரென்று செயலிழந்த விமானத்தை சாமர்த்தியமாக தரையிறக்கி, மொத்த பயணிகளின் உயிரையும் காப்பாற்றியுள்ளார் விமானி ஒருவர்.
சைபீரியாவின் Kedrovy பகுதியில் இருந்து Tomsk நகருக்கு செல்லும் வழியிலேயே பயணிகள் விமானத்தில் இரு இயந்திரங்களும் திடீரென்று செயலிழந்துள்ளது.
இதனையடுத்து, துணிச்சலாக செயல்பட்ட 56 வயது விமானி Anatoly Prytkov, ஆள் நடமாட்டமற்ற ஒரு பகுதியில் அவசர தரையிறக்கத்திற்கு முயன்று அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.
விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானாலும், அதில் பயணித்த 19 பயணிகளும் லேசான காயங்களுடன் தப்பியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் விமானியின் கால் உடைந்ததே மருத்துவமனையை நாடும் அளவுக்கு பெரிய காயமாக பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பேசிய மாகாண ஆளுநர் Sergei Zvachkin, நாம் அனைவரும் அதிசயங்களை நம்புவோம், இதுவும் அதுபோன்ற ஒரு சம்பவமே என்றார்.
மட்டுமின்றி, ஆபத்தான கட்டத்தில் துணிந்து செயல்பட்டுள்ளதுடன், பல உயிர்களை காப்பாற்றிய விமானிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
விமான இயந்திரங்கள் திடீரென்று பனியால் உறைந்ததே, இந்த சிக்கலுக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.
ஆனால், விமானி தமது இத்தனை ஆண்டு கால அனுபவத்தை இச்சம்பவத்தில் நிரூபித்துவிட்டார் என பயணிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.