அமைதியாக அமுலுக்கு வந்த பிளான் C... முதல் கட்டுப்பாடு இவர்களுக்குத்தான்
பிரித்தானியா, Omicron வகை கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்து வருகிறது.
பிளான் B கட்டுப்பாடுகளும் போதாது, பிளான் C கட்டுப்பாடுகள் தேவை என ஒருபக்கம் அதிகாரிகள் கூற, பிளான் C என்று ஒன்று கிடையாது என வழக்கம்போல பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவிக்க, அமைதியாக பிளான் C நடைமுறைக்கு வந்தேவிட்டது.
அதன்படி, முதல் நடவடிக்கையாக, முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போரை Omicron வகை மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக அவர்கள் மூன்று பேருக்கு அதிகமான உறவினர்களை சந்திக்க தடை விதிக்கப்பட உள்ளது.
Communities Secretary பொறுப்பு வகிக்கும் Michael Gove கூறும்போது, கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரிக்குமானால், மேலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றார்.
மக்கள் தங்கள் வாழ்வை தொடர்ந்து நடத்தவேண்டிய நிலையில், கொரோனா வைரஸிலிருந்து அவர்களைப் பாதுகாக்கவும் வேண்டும். ஆகவே, இந்த இரண்டு விடயங்களையும் சமநிலையில் வைத்திருப்பதன் அவசியத்தை உணர்ந்திருக்கிறோம். ஆனால், நடவடிக்கை எடுப்பது கட்டாயம் அவசியமாகும். புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோர் குறித்த தரவுகள் வந்துகொண்டிருக்கும் நிலையில், அந்த தரவுகளின் அடிப்படையில் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது என்பது குறித்து முடிவு செய்ய இருக்கிறோம் என்றார்.
புதிய கட்டுப்பாடுகளின்படி, முதியோர் இல்லங்களில் தங்கியிருப்போர் தடுப்பூசி பெற்றிருக்காத பட்சத்தில், அவர்கள் வெளியே சென்று திரும்பினால், அவர்கள் தங்களை இரண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்திக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவார்கள்.
அவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றவர்களானாலும், அவர்கள் முதியோர் இல்லத்தை விட்டு வெளியே சென்று திரும்பினால், அவர்கள் 15 நாட்களுக்கு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் lateral flow test என்னும் வகையிலான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவேண்டும்.
இதுபோக, பிளான் Cயின் கீழ், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்கு செல்வோர், NHS Covid appஉடன் செல்ல கட்டாயப்படுத்தப்படுதல், மாஸ்குகள் பயன்பட்டை நீட்டித்தல் மற்றும் மேலும் அதிக இடங்களுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட்கள் பயன்பாட்டை அதிகரித்தல் ஆகிய திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.