கடைசி நிமிடத்தில் எடுத்த முடிவு... 98 பேர் கொல்லப்பட்ட விமான விபத்தில் உயிர் தப்பிய நபர் வெளிப்படை
பாகிஸ்தான் நாட்டில் 98 பேர் கொல்லப்பட்ட பயங்கரமான விமான விபத்தில், கடைசி நிமிடத்தில் எடுத்த முடிவால் ஒருவர் உயிர் தப்பிய சம்பவத்தை அவரே பகிர்ந்துள்ளார்.
பாகிஸ்தானின் கராச்சியில் 2020 மே மாதம் ஏற்பட்ட பயங்கர விமான விபத்தில் 98 பேர் கொல்லப்பட, இருவர் மட்டுமே அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அதில் ஒருவர் ஜாபர் மசூத்.
பாகிஸ்தான் சர்வதேச விமான சேவையின் விமானம் ஒன்று திடீரென்று ஏற்பட்ட கோளாறு காரணமாக குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமானம் தரையிறங்கும் நடவடிக்கைகள் கைவிடப்பட்ட நிலையில், ஓடுதளத்தில் இருந்து அதிவேகத்தில் மேலெழும்பியது அந்த விமானம். குறித்த விமானத்தின் இரண்டு இயந்திரங்களும் பழுதாக, ஜின்னா சர்வதேச விமான நிலையத்தில் மூன்று முறை வட்டமிட்டு, இறுதியில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.
விமான பயணத்தில் ஜன்னலோர இருக்கை அனுமதிக்கப்பட, ஜாபர் வாசலின் அருகாமையில் உள்ள இருக்கையை மாற்றிக்கொண்டார். ஜாபர் இருக்கையை எடுத்துக்கொண்டவர் துரதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் கொல்லப்பட, ஜாபர் லேசான காயங்களுடன் தப்பியுள்ளார்.
விமானம் விழுந்து நொறுங்கியதும், ஜாபர் மசூத் அமர்ந்திருந்த இருக்கையானது தூக்கி வெளியே வீசப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மீது விமான இருக்கையுடன் ஜாபர் மசூத் சென்று விழுந்துள்ளார்,
இதில் கார் சேதமடைந்துள்ளது. இதனிடையே பொதுமக்கள் சிலர் ஜாபர் மசூத் உயிருடன் இருப்பதை அறிந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தமக்கான இருக்கையை சக பயணி ஒருவருடன் மாற்றிக்கொள்ள முடிவு செய்த அந்த நிமிடமே தமக்கு மறக்க முடியாத தருணம் என ஜாபர் மசூத் தெரிவித்துள்ளார்.