இளைஞரின் மரணத்திற்கு காரணம் இதுதான்... ஜே.டி. வேன்ஸின் கருத்துக்கு பிரதமர் பதிலடி
நமது ஜனநாயகத்தில் தலையிட சிலர் முயல்வதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி வேன்ஸின் கருத்துகளுக்கு பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகம் பதிலடி கொடுத்துள்ளது.
ஜனநாயகத்தில் தலையிட
பிரித்தானியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெள்ளை மாளிகை நிர்வாகம் தலையிடுவது குறித்து, பிரதமர் அலுவலகத்தின் இந்த நடவடிக்கை ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வாரத்தில் ஏற்பட்டுள்ள போராட்டங்களை அமைதிப்படுத்தும் நோக்கில் பிரதமர் ஸ்டார்மர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் கேமி பேடனாக் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், பிரதமர் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர், சமீப நாட்களில், நமது ஜனநாயகத்தில் தலையிடவும், வீதிகளில் பிளவுகளை ஏற்படுத்தவும் மக்கள் முயற்சிப்பதை நாம் கண்டு வருகிறோம் என்றார்.
ஹென்றியின் கொடூரமான கொலைக்குப் பிறகு நோவாக் குடும்பத்தினர் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். அவரது மரணம் மேலும் பிளவையோ, வெறுப்பையோ அல்லது பதற்றத்தையோ உருவாக்கப் பயன்படுத்தப்படுவதை அவர்கள் விரும்பவில்லை என்று கூறியுள்ளனர்.
நாம் அவர்களின் விருப்பத்தை மதிக்க வேண்டும். மிகவும் மோசமான சூழல்களிலும் கூட, நம் அரசியல் மக்களை ஒன்றிணைப்பதாக இருக்க வேண்டும். ஒரு நாடாக நாம் அப்படித்தான் இருக்கிறோம் என்றார்.
ஹென்றியின் துயர மரணம் குறித்து வெள்ளிக்கிழமையன்று கருத்து தெரிவித்த துணை ஜனாதிபதி வேன்ஸ், அவரது மரணம் மிகுந்த ஆத்திரமூட்டுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
குடியேறிகளின் வருகை
சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள வேன்ஸ், ஹென்றி இன்றும் உயிருடன் இருந்திருக்க வேண்டும்; ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கத்தினர் கடந்த சில தலைமுறைகளாகத் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, தங்களையே வெறுத்துக்கொள்ளும் அரசியல் போக்குக்கும்,
மேற்கத்திய உலகையும் அதை நேசிப்பவர்களையும் வெறுக்கும் பல குடியேறிகளின் பெருந்திரளான வருகைக்கும் எதிராகத் துணிச்சலுடன் செயல்பட்டிருந்தால், ஹென்றி நிச்சயம் இன்று உயிருடன் இருந்திருப்பார் என பதிவு செய்திருந்தார்.
முன்னதாக, பிரித்தானியா இரு அடுக்குக் காவல் முறையால் பாதிக்கப்பட்டுள்ளது என்ற டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றச்சாட்டுகளை பிரித்தானியாவின் பிரதமர் அலுவலகம் ஏற்கெனவே நிராகரித்திருந்தது.

இதனிடையே, அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் தலையீட்டிற்குப் பின்னால் உள்ள கவலைகள் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கும், அந்தக் கருத்துக்கள் குறித்து விளக்கம் கோருவதற்கும், பிரதமர் அலுவலகமும் வெளிவிவகார அலுவலகமும் தங்களது அமெரிக்க சகாக்களைத் தொடர்பு கொண்டதாகவே தகவல் கசிந்துள்ளது.
இந்த நிலையில், எல்லைகளைப் பாதுகாப்பது என்பது நடைமுறைச் சிக்கல்களைச் சார்ந்ததல்ல, மாறாக அரசியல் உறுதிப்பாடு மற்றும் தலைமைத்துவத்தைச் சார்ந்த ஒரு விடயம் என்பதை ட்ரம்ப் நிர்வாகம் வெளிப்படுத்தியுள்ளது என வேன்ஸ் வாதிட்டுள்ளார்.
நாம் மேற்கத்திய நாகரிகத்தை நேசிப்பதால்தான் அதைப் பாதுகாக்க விரும்புகிறோம். நாம் நமது நாகரிகத்தை நேசிக்கிறோம் எனவும் வேன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |