நாக்பூர் கலவரத்திற்கு காரணமான முக்கிய குற்றவாளி பொலிஸாரால் கைது
நாக்பூர் வன்முறையை தூண்டியவராக பொலிஸாரால் கூறப்படும் முக்கிய குற்றவாளியை பொலிஸார் கைது செய்தனர்.
குற்றவாளி கைது
இந்திய மாநிலமான மகாராஷ்டிரா, நாக்பூரில் உள்ள முகலாய மன்னர் ஓரங்கசீப்பின் கல்லறையை இடிக்க வேண்டும் என்று மாநிலத்தின் வலது சாரி அமைப்பு கூறியது.
இதற்காக கடந்த 17-ம் திகதி இரவு 7.30 மணி அளவில் அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸின் சொந்த ஊரான மத்திய நாகபுரியின் சிட்னிஸ் பூங்கா பகுதியில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் கடைசியில் வன்முறையில் முடிந்தது.
அப்போது, ஒரு சமூகத்தின் புனித நூல் ஒன்று எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதால் அங்கிருந்த பொலிஸார் மீது சிலர் கல் வீசி வன்முறையை தூண்டினர்.
மேலும், அன்று இரவு 10.30 மணியளவில் நகரின் மற்றொரு பகுதியான ஹம்சபுரியில் சிலர் வன்முறையை தூண்டியதால் மோதல் வெடித்தது.
அங்குள்ள, பொதுமக்களின் வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் சூறையாடப்பட்டன. மேலும், வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர்.
இந்த வன்முறையில் 3 துணை ஆணையர்கள் உள்பட பொலிஸார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பல காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வன்முறை கலவரத்தை தூண்டுவதற்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி பஹீம் கான் என்பவரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |