பிறந்தநாள் கொண்டாடும் ஆண்ட்ரூ... சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் வந்த பொலிசார்
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ தங்கியிருக்கும் சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் 6 வாகனங்களில் இன்று பொலிசார் சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணை அதிகாரிகளா
முன்னாள் இளவரசரான ஆண்ட்ரூ இன்று தனது 66வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இந்த நிலையிலேயே காலை 8 மணிக்குப் பிறகு மன்னர் சார்லஸின் நோர்போக் எஸ்டேட்டிற்கு 6 வாகனங்களில் பொலிசார் சென்றுள்ளனர்.

ஆனால், இது விசாரணை அதிகாரிகளா என்பது தொடர்பில் தகவல் ஏதும் உறுதி செய்யப்படவில்லை. 8 பேர்கள் கொண்ட ஒரு குழு சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் சென்றதாக அப்பகுதி மக்கள் உறுதி செய்துள்ளனர்.
அதில் ஒருவர், பொலிசாருக்கான மடிக்கணியுடன் காணப்பட்டுள்ளார். இன்று 66 வயதாகும் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கியதைத் தொடர்ந்து விண்ட்சரில் உள்ள மாளிகையில் இருந்து தனது மூத்த சகோதரரால் வெளியேற்றப்பட்ட பின்னர் சாண்ட்ரிங்ஹாமில் தங்கியுள்ளார்.
பிரித்தானியாவில் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ள நிலையில், சாண்ட்ரிங்ஹாமில் பொலிசார் காணப்பட்டுள்ளனர்.
மட்டுமின்றி, மனித கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட எப்ஸ்டீன் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளைத் தொடங்கும் முன்னர் ஆய்வுகளை முன்னெடுக்க ஒன்பது பொலிஸ் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

எப்ஸ்டீன் விவகாரத்தில்
பாலியல் கடத்தல், அரசாங்க அதிகாரியாக தவறான நடத்தை மற்றும் பாலியல் கடத்தல் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள் மதிப்பாய்வு செய்து வருகின்றனர். ஆண்ட்ரூ இன்னும் அவர்களுடன் விசாரணை நிமித்தமான சந்திப்பை முன்னெடுக்கவில்லை.
ஆனால் அவரது சகோதரர் மன்னர் சார்லஸ், காவல்துறையினரின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
மறைந்த ராணியாரின் இரண்டாவது மகனான ஆண்ட்ரூ, பிரித்தானியாவின் வர்த்தக தூதராக இருந்தபோது, எப்ஸ்டீனுக்கு முக்கியமான தகவல்களை கசியவிட்டிருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.

மட்டுமின்றி, எப்ஸ்டீனின் Lolita Express தனி விமானத்தில் பிரித்தானியாவிற்கு கடத்தப்பட்ட ஒரு பெண்ணை பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் அவர் அழைத்துச் சென்றிருக்கலாம் என்ற தகவலும் கசிந்துள்ளது.
சாண்ட்ரிங்ஹாம் மாளிகையில் காணப்பட்டுள்ள பொலிசார், கட்டாயம் எப்ஸ்டீன் விவகாரத்தில் விசாரணை முன்னெடுக்கவே என்பது உறுதி என்றே கூறுகின்றனர். பெருநகர பொலிசாரும் ஆண்ட்ரூ விவகாரத்தில் முதற்கட்ட விசாரணைகள் துவக்கப்பட்டுள்ளதாகவே தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |