பிரித்தானியாவில் தொடரும் பெட்ரோல் பிரச்சினை... கத்தியை உருவிய சாரதி: மக்கள் மனநிலையை விளக்கும் வீடியோ
பிரித்தானியாவில் பெட்ரோல் தட்டுப்பாடு மக்களின் மன நிலையை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் கனரக வாகன சாரதிகள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் முதலான அத்தியாவசிய பொருட்களை கொண்டு வருவதில் கடும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதனால் மக்கள் எப்படியாவது எரிபொருள் நிரப்பிவிடவேண்டும் என பெட்ரோல் நிலையங்கள் முன் மணிக்கணக்கில் காத்துக் கிடக்கிறார்கள்.
அப்படி காத்திருக்கும் நேரத்தில் இரண்டு சாரதிகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினையில், கோபத்தில் ஒருவர் கத்தியை உருவிக்கொண்டு மற்றொருவர் மீது பாய, அவர் இவரை காரைக்கொண்டு தள்ளிக்கொண்டே செல்லும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று வெளியாகி மக்களின் மன நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இதற்கிடையில், ஆம்புலன்ஸ் சாரதிகள், மருத்துவர்கள், செவிலியர் முதலானோர் பெட்ரோல் கிடைக்காமல் திணறி வருவதால், மருத்துவ சேவை பாதிக்கும் ஒரு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இன்னொரு பக்கம், ஆசிரியைகள் பள்ளிக்கு வர பெட்ரோல் போட வழியில்லாமல் திணறி வருவதைத் தொடர்ந்து, மீண்டும் ஒன்லைன் வகுப்புகளுக்குத் திரும்பும் ஒரு சூழல் உருவாகியுள்ளது.
ஆகவே, அத்தியாவசிய பணியாளர்களுக்கு பெட்ரோல் பெற்றுக்கொள்வதில் முன்னுரிமை வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசும் அதற்காக திட்டங்கள் வகுத்து வருகிறது.
தற்காலிக விசா வழங்கி வெளிநாட்டு சாரதிகளைக் கொண்டுவரும் போரிஸ் ஜான்சனின் திட்டத்தை வெளிநாட்டு சாரதிகள் கண்டுகொள்ளாததால், அவர் ட்ரக் ஓட்டுவதற்கு இராணுவ வீரர்களை ஏற்பாடு செய்யவேண்டிய ஒரு நிலை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் சூடான 24 மணி நேர விவாதத்திற்குப் பின் அமைச்சர்கள் இராணுவ வீரர்களை பெட்ரோல் ட்ரக்குகளை இயக்க அனுமதிக்க சம்மதம் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 150 இராணுவ டேங்கர் சாரதிகள் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிலைமையை சமாளிப்பதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையில், கிறிஸ்துமஸ் காலகட்டம் நெருங்கி வரும் நிலையில், உணவுப்பொருட்கள் உட்பட பல முக்கியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் ஒரு அபாயமும் உருவாகியுள்ளது.