ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை கண்டுபிடித்த பொலிசார்: தொடர்ந்த பயங்கரம்...
ஜேர்மானியர் ஒருவர் மான் வேட்டையாடியதை பொலிசார் கண்டுபிடித்ததால், அவர்களை சுட்டுக் கொன்றுள்ளார் அவர்.
சட்ட விரோதமாக மான் வேட்டைக்குச் சென்ற ஜேர்மானியர்கள்
ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Kusel என்ற நகரில் பொலிசார் இருவர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, Andreas S (39) மற்றும், Florian V(33), என்னும் இருவர் பயணித்த வாகனத்தை அவர்கள் நிறுத்தி சோதனையிட முயன்றபோது, திடீரென பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் Andreas.
விடயம் என்னவென்றால், Andreasம் அவரது கூட்டாளியும் சட்ட விரோதமாக மான் வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள், சுமார் 20 மான்களை அவர்கள் வேட்டையாடியும் இருக்கிறார்கள்.
ஆகவே, பொலிசார் அவர்களுடைய வாகனத்தை நிறுத்தவே, தாங்கள் சட்ட விரோதமாக 20 மான்களைக் கொன்றது தெரியவந்துவிடும் என்பதால் Andreas பொலிசாரை நோக்கி துப்பாக்கியால் சுட, முதலில் 24 வயதுடைய பெண் பொலிசார் மீது குண்டு பாய்ந்திருக்கிறது. பின்னர் Andreas மற்றொரு பொலிசாரையும் சுட்டிருக்கிறார். அந்த 29 வயது ஆண் பொலிசார் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும், அந்த தகவலை தனது சகாக்களுக்கு தெரிவித்துவிட்டபின்னரே உயிரிழந்திருக்கிறார்.
தற்காப்புக்காக சுட்டதாக தெரிவித்த குற்றவாளிகள்
பொலிசார் உடனடியாக பொதுமக்கள் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டை ஒன்றில் இறங்க, மறுநாள் குற்றவாளிகள் இருவரும் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.
ஆனால், பொலிசாரிடம் சிக்கியதும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸ் விசாரணையில், கொல்லப்பட்ட பொலிசார் இருவரையும் துப்பாக்கியால் சுட்டது Andreasதான் என்பது தெரியவந்ததையடுத்து, அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
திடீரென பொலிசார் தங்களை தடுத்து நிறுத்தியதால், தற்காப்புக்காக, தான் சுட்டதாக Andreas தெரிவித்திருந்தார்.
ஆனால், பொலிசார் இருவரும் சுடப்பட்ட பின்பும், தனது வாகனத்தை விட்டு இறங்கிய Andreas, அந்த பெண் பொலிசார் தனது குறிப்புப் புத்தகத்தில் தன்னைக் குற்றவாளியாக்கும் வகையில் ஏதாவது எழுதிவைத்திருக்கிறாரா என்பதை அறிவதற்காக, சுடப்பட்டு இரத்தம் வழியக் கிடந்த அந்த பெண் பொலிசாரின் உடைகளை சோதனையிட்டுள்ளார்.
அப்போது, அவர் உயிருடன் இருப்பது தெரியவரவே, மீண்டும் அவரது தலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் Andreas.
ஆகவே, இது தற்செயலாக நடந்தது அல்ல, கொலை என முடிவு செய்த நீதிமன்றம், Andreasக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.