'இனி இந்த சலுகைகள் கிடையாது' புதிய சட்டத்தை அமுல் படுத்திய போப் பிரான்சிஸ்!
வாடிகன் நகர கார்டினல்கள் மற்றும் பாதிரியார்களின் கிரிமினல் குற்றங்களை, மற்ற கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் அதே வழக்கறிஞர்கள் விசாரிப்பார்கள் என்ற புதிய சட்டத்தை போப் பிரான்சிஸ் அறிமுகப்படுத்தினார்.
ஐரோப்பிய நாடான வாடிகன் சிட்டியில், உலகெங்கும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைமை மதகுருவான, போப் பிரான்சிஸ் வசிக்கிறார்.
அவர், வாடிகன் நகர கார்டினல்கள், பாதிரியார்கள் உள்ளிட்டோர் குற்றச் செயல்களுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் குற்றம் புரிவோருக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வாடிகன் நகர சட்டங்களில் சீர்திருத்தங்கள் செய்து வருகிறார்.
இந்நிலையில், புதிய சட்டத்தை, போப் பிரான்சிஸ் அறிமுகப்படுத்தினார். இதன்படி, கிரிமினல் குற்றம் புரியும் கார்டினல்கள், பாதிரியார்கள் ஆகியோர் மீது, போப் அனுமதியின் படி, வாடிகன் நகர வழக்கறிஞர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தலாம்.
தற்போது, மூன்று கார்டினல்கள் தலைமையிலான, சிறப்பு வாடிகன் கிரிமினல் குற்ற தீர்ப்பாயத்திற்கு மட்டுமே இத்தகைய விசாரணையை மேற்கொள்ள அதிகாரம் உள்ளது. இந்த புதிய சட்டம் வாயிலாக, அந்த அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது.
இதனால், கார்டினல்கள் மற்றும் உலகெங்கும் உள்ள பாதிரியார்கள் மீதான கிரிமினல் குற்றங்களை, மற்ற கிரிமினல் வழக்குகளை விசாரிக்கும் அதே வழக்கறிஞர்கள் விசாரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல், வாடிகனில் உள்ள கார்டினல்களின் சொத்து விபரங்களை அறிவிக்கும் சட்டத்தை, போப் பிரான்சிஸ் பிறப்பித்துள்ளார்.
அத்துடன், 40 யூரோக்களுக்கு மேற்பட்ட பரிசுப் பொருட்களை, கார்டினல்கள் அல்லது பாதிரியார்கள் பெறுவதற்கு தடை விதிக்கும் சட்டத்தையும் அமல்படுத்தியுள்ளார்.