நாம வட கொரியாவில் வாழ்கிறோமா? வேதனையில் புலம்பும் சீன மக்கள்
வடகிழக்கு சீனாவில் மின்சாரம் தடைபட்டதால் மில்லியன் கணக்கான வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன, தொழிற்சாலைகள் முடங்கியதுடன் குறைந்தது ஒரு மாகாணத்தில் நீர் விநியோகமும் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
Jilin, Liaoning மற்றும் Heilongjiang மாகாணங்களில் கடுமையான மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நிலை இன்னும் சில நாட்களுக்கு நீடித்தால் சீனப் பொருளாதாரத்தில் நேரடி தாக்கம் ஏற்படும் என கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சீனாவில் நிலக்கரி இறக்குமதியில் ஏற்பட்ட சரிவு காரணமாகவே தற்போது கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மொத்தம் 17 மாகாணங்களில், கடந்த சில மாதங்களாகவே மிக மோசமாக மின்வெட்டு நிலவுகிறது.
குறிப்பிட்ட மாகாணங்களில் இருந்துதான் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு 66% பங்களிப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் தொடர்புடைய மாகாணங்களில் உள்ள சிறு, குறு, கனரக தொழிற்சாலைகள் என அனைத்துமே வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
சீனா தனக்குத் தேவையான நிலக்கரிக்கு அவுஸ்திரேலியாவையே நம்பியிருக்கிறது. ஆனால் அவுஸ்திரேலியாவுடன் வர்த்தக ரீதியாக ஏற்பட்ட சில பிணக்குகளால் சீனாவுக்கு நிலக்கரி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
ஏற்கெனவே பெருந்தொற்றால் இறக்குமதி பாதிப்பு. அத்துடன் வர்த்தகத் தகராறு என இருமுனைகளில் நிலக்கரி பெறுவது பாதிக்கப்பட்டது. இதனால் மின் உற்பத்தியிலும் பாதிப்பு ஏற்பட்டது. இந்தச் சூழலில், மின் பகிர்மானத்தை ரேஷன் முறையில் சீனா விநியோகிக்கத் தொடங்கியுள்ளது.
குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் அதிகபேர் அதிகமாக மின் சாதனங்களைப் பயன்படுத்தும் நேரங்களில் மின் வெட்டு அதிகமாக அமுல்படுத்தப்படுகிறது. இந்த மின்வெட்டால் தொழிற்சாலை உற்பத்தி சரியும் சூழலில் நாட்டின் வருடாந்திர பொருளாதாரம் 8.2%ல் இருந்து 7.8% என சரிவடையும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர் மின்வெட்டால் எத்தகைய பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து பீஜிங் ஊடகம் வெளியிட்ட வீடியோவில், ஷென்யாங் நகரில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் கூட இல்லாமல் இயங்கும் வாகனப் போக்குவரத்து குறித்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லியோனிங் எனும் நகரில்,வாரத்தில் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 8 முறை என்ற வீதத்தில் மின்வெட்டு அமுலில் இருப்பதாக அந்த நகரவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். மின்வெட்டால் பெரிய வணிக வளாகங்கள் மாலை நேரம் வந்த உடன் மூடப்படுகின்றன.
சிறு கடைகள் அனைத்துமே மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்குகின்றன.
இந்த நிலையில், வட கொரியாவில் வாழ்வதைப் போல் இருப்பதாக புதிய மின்வெட்டுப் பிரச்சினை குறித்து சீன மக்கள் வேதனை தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.