பிரதமர் எடுத்த முடிவால் இருளில் மூழ்கிய பாகிஸ்தான்! 220 மில்லியன் மக்கள் பாதிப்பு
பாகிஸ்தானில் எரிபொருள் செலவை குறைக்க மின் உற்பத்தி அமைப்பை நிறுத்தியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
பொருளாதார நெருக்கடி
பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நிய செலவாணி கையிருப்பு அபாயகரமான அளவில் குறைந்துள்ளதாக பாகிஸ்தானில் அறிவிக்கப்பட்டது.
அதாவது, கடந்த டிசம்பர் மாதத்தில் நாட்டின் மொத்த அந்நிய செலவாணி கையிருப்பு 11.7 பில்லியன் டொலர்களாக இருந்தது. இது கடந்த ஆண்டின் தொடக்கத்தில் வைத்திருந்த தொகையில் பாதி என்று மத்திய வங்கி கூறியது.
இதன் காரணமாக எரிசக்தி பயன்பாட்டை குறைக்கும் முடிவை பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கையில் எடுத்தார். அதன்படி அனைத்து மத்திய துறைகளும் எரிசக்தி ஆற்றல் பயன்பாட்டை 30 சதவீதம் குறைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
@AP
அதே நேரம் அனைத்து சந்தைகளும் இரவு 8.30 மணிக்கும், உணவகங்கள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாடு முழுவதும் மின்தடை
இந்த நிலையில், எரிபொருள் செலவை மிச்சப்படுத்த நேற்று இரவு மின் பகிர்மான கட்டமைப்பின் சில பகுதிகளை அதிகாரிகள் நிறுத்தினர். அதன் பின்னர் அந்த அமைப்புகள் செயல்பாட்டிற்கு கொண்டுவந்தபோது மின் விநியோகத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகி, மின் பகிர்மான அமைப்பு தோல்வியடைந்தது.
இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் தடைபட்டது. இது சுமார் 220 மில்லியன் மக்களை நேரடியாக பாதித்தது. பல்வேறு நகரங்களில் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தடைப்பட்டன.
மின்தடை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெளிவாக தெரியவில்லை என்றும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் மின்சாரத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
File Representational Photo
@AFP/Farooq Naeem