தந்தையின் வாழ்க்கைக்குள் நுழைந்த பெண்ணை ஏற்க மறுத்த இளவரசர் ஹரி: பிரச்சினையை சமாளிக்க இளவரசர் சார்லஸ் முயற்சி
தன் அன்புத் தாய்க்கும் தந்தைக்கும் இடையில், அவர்களது வாழ்க்கையில் நுழைந்த பெண்ணை ஏற்க மறுத்த இளவரசர் ஹரியை சமாளிப்பதற்காக, இளவரசர் சார்லஸ் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இளவரசர் ஹரியின் தாய் டயானா உயிரிழக்கும்போது, ஹரிக்கு வயது 15. அதற்கு முன்பே தந்தையும் தாயும் விவாகரத்து செய்துவிட்டிருந்தார்கள்.
தன் தாய் மீது மிகுந்த அன்பு கொண்டவர் இளவரசர் ஹரி (வில்லியமும் கூட அப்படித்தான்). ஆகவே, அப்போதே, தன் தந்தையின் வாழ்வில் நுழைந்த பெண்ணாகிய கமீலாவை அவருக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு மட்டுமல்ல, அந்த காலகட்டத்தில் ராஜ குடும்பத்தினருக்கும், மக்களின் இளவரசி என அழைக்கப்படும் இளவரசி டயானாவை அதிகம் நேசித்த பிரித்தானிய மக்களுக்கும்கூட கமீலாவைப் பிடிக்கவில்லை.
ஆனால், சார்லஸோ கமீலா மீது கண்மூடித்தனமான காதல் கொண்டிருந்தார். டயானாவை திருமணம் செய்யும் முன் கொஞ்சமாக இருந்த அந்த காதல், சார்லசுக்கும் டயானாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டதும் பற்றிப்பிடித்துக்கொள்ள, இப்போதும் அப்படியே தொடர்கிறது.
இந்நிலையில், இளவரசர் ஹரி, தன் சுயசரிதைப் புத்தகம் ஒன்றை வெளியிட இருக்கிறார். அந்த புத்தகத்தில், ஹரி, தன் தாயின் மரணம் குறித்தும், அதற்கு யார் காரணம் என்பது குறித்தும் அதிகம் விவரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆக, அந்த புத்தகத்தில் ஹரி தன் காதல் மனைவியான கமீலாவைக் குறித்து எழுதி, அவரை அவமதித்துவிடுவாரோ என சார்லஸ் பயப்படுகிறார்.
நீண்ட காலமாக கமீலா மீது வெறுப்பு வைத்திருந்த பிரித்தானிய மக்கள், அவர் சார்லஸை முறைப்படி திருமணம் செய்துகொண்டதற்குப் பிறகு, இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக அவரை ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளார்கள்.
இந்த நேரத்தில் ஹரி அதைக் கெடுத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் சார்லஸ்.
இதற்கிடையில், மகாராணியாரின் 70 ஆண்டு கால ஆட்சியைக் கொண்டாடும் வகையில், அவரது பிளாட்டினம் ஜூபிலிக் கொண்டாட்டங்கள் இந்த ஆண்டு கோடையில் கொண்டாடப்பட உள்ளன.
அதற்கு ஹரியும் அவரது குடும்பத்தினரும் வருவார்களா என்பது ஒரு பக்கம் கேள்விக்குறியாக இருக்க, இந்த நேரத்தில் ஹரியின் புத்தகம் தன் மனைவி கமீலாவுக்கு அவமானத்தை ஏற்படுத்திவிடக்கூடாது என சார்லஸ் பயப்படுகிறார்.
ஆகவே, இளவரசர் சார்லஸ், தன் மகன் ஹரியையும் அவரது குடும்பத்தினரையும் தன்னுடன், தன் வீட்டில் தங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தன் பேரப்பிள்ளைகளை அவர் சந்திக்க விரும்புவதால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், அதன் பின்னணியில் சார்லஸின் சுயநலமான எண்ணமும் உள்ளது என கருதப்படுவதாக பிரித்தானிய பத்திரிகைகள் பல தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.