மெளன அஞ்சலி... 8 நிமிட ஊர்வலம்: இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு விவரங்கள் வெளியானது
மறைந்த இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு, அவரது மனைவியும் பிரித்தானிய ராணியாருமான இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவரான இளவரசர் பிலிப் நேற்று காலை விண்ட்சர் கோட்டையில் வைத்து தமது 99 வயதில் காலமானார்.
தற்போது தமது கணவர் இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளுக்கு ராணியார் இரண்டால் எலிசபெத் ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை, ஏப்ரல் 17ம் திகதி மாலை, இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகள் முன்னெடுக்கப்பட உள்ளது.
இந்த நிகழ்வில் பொதுமக்களுக்கான அனைத்து அம்சங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இறுதிச் சடங்கு நிகழ்வுகள் அனைத்தும் நேரலை செய்யப்படும் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்றைய நாள் மாலை 3 மணிக்கு இங்கிலாந்து முழுவதும் ஒரு நிமிட மெளன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, இறுதிச் சடங்கு நிகழ்வுகள் முன்னெடுக்கப்படும், இதனால் பங்கேற்கும் அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்ட 30 பேர்கள் மட்டுமே இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளனர்.
இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்குகளில் பேரப்பிள்ளையான இளவரசர் ஹரி பங்கேற்பது உறுதியாகியுள்ள நிலையில், அவரது கர்ப்பிணி மனைவி மேகன், மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி விமான பயணத்தை தவிர்ப்பார் என தெரிய வந்துள்ளது.
இது கொரோனா அச்சுறுத்தல் மிகுந்த நேரம் என்பதால், விமரிசையான ஊர்வலம் மற்றும் அரசு மரியாதை எதுவும் முன்னெடுக்கப்படாது என கூறப்படுகிறது.
சனிக்கிழமை மாலை, வின்ட்சர் கோட்டையில் இருந்து உரிய மரியாதையுடன் இளவரசர் பிலிப்பின் உடல் அருகாமையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு எடுத்துச் செல்லப்படும்.
சுமார் 8 நிமிடங்கள் நீளும் இந்த ஊர்வலத்தில் இராணுவத்தினரே பங்கேற்பார்கள். கூடவே குடும்ப உறுப்பினர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் இளவரசரின் தனிப்பட்ட அதிகாரிகளும் கலந்து கொள்வார்கள்.
இந்த ஊர்வலமானது சரியாக 3 மணிக்கு செயின்ட் ஜார்ஜ் சேப்பலுக்கு சென்றடையும், அதன் பின்னர் ஒரு நிமிட மெளன அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலம் முடியும் வரையில் தேவாலய மணிகள் முழங்கும், அத்துடன் துப்பாக்கி குண்டு முழங்க மரியாதை செலுத்தப்படும்.
இறுதிச் சடங்குகளில் பங்கேற்கும் விருந்தினர்களின் பட்டியல் உள்ளிட்ட முக்கிய தகவல்கள், எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதி செய்துள்ளது.