பூமியை காப்பாத்துங்க... உலக பணக்காரர்கள் சிலரை மறைமுகமாக சாடிய இளவரசர் வில்லியம்?
பிரித்தானியா இளவரசர் வில்லியம், விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை விட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெப் பெசோஸ் புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் கடந்த ஜுலை மாதம், நியூ ஷெப்பர்ட் என்ற ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஜெப் பெசோஸ் அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று திரும்பினர். இதைத்தொடர்ந்து, எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 4 பேரை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று திரும்பியது.
இந்நிலையில், விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என பிரித்தானியா இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் படைத்தவர்கள், மனித வாழ்வுக்கு மற்றொரு கிரகத்தை தேடாமல் நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.