ஆண்ட்ரூ குறித்து கேள்வி...இளவரசர் வில்லியமுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பிரேசில் நாட்டுக்குச் சென்றுள்ள பிரித்தானிய இளவரசரான வில்லியமுக்கு தர்மசங்கத்தை ஏற்படுத்தும் கேள்வி ஒன்றை எழுப்பினார் ஊடகவியலாளர் ஒருவர்.

ராஜ குடும்பத்துக்கு தொடரும் தலைக்குனிவு
பிரித்தானிய இளவரசரும், மன்னர் சார்லசுடைய தம்பியுமான இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் சிறுமிகளையும் இளம்பெண்களையும் சீரழித்த மோசமான பாலியல் குற்றவாளியான அமெரிக்க கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்த விடயம் தெரியவந்தததைத் தொடர்ந்து ராஜகுடும்பம் பெரும் தலைக்குனிவை சந்தித்துவருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இங்கிலாந்திலுள்ள Lichfield தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்காக சென்றிருந்தார் மன்னர் சார்லஸ்.
மக்கள் அவரை உற்சாகத்துடன் வரவேற்றுக்கொண்டிருந்த நேரத்தில், கூட்டத்திலிருந்த ஒரு நபர், ஆண்ட்ரூ குறித்து சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

ஆண்ட்ரூவுக்கும் எப்ஸ்டீனுக்கும் தொடர்பு இருப்பது உங்களுக்கு எவ்வளவு காலமாகத் தெரியும், ஆண்ட்ரூவின் குற்றங்களை மறைக்க பொலிசாரைக் கேட்டுக்கொண்டீர்களா, இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதியளிக்கப்படுமா என அவர் சரமாரியாகக் கேள்விக் கணைகளைத் தொடுக்க, மன்னர் சார்லஸ் பதில் கூறமுடியாமல் வாயடைத்து நின்றார்.
இளவரசர் வில்லியமுக்கு ஏற்பட்ட தர்மசங்கடமான நிலை
மன்னருக்கு ஏற்பட்டதைப்போன்றதொரு நிலைமை, வருங்கால மன்னரான இளவரசர் வில்லியமுக்கும் ஏற்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான Earthshot Prize என்னும் விருதுகளை வழங்குவதற்காக வில்லியம் பிரேசில் நாட்டுக்குச் சென்றுள்ள நிலையில், இளவரசர் ஆண்ட்ரூவைக் குறிப்பிடும் வகையில் மறைமுகமாக ஒரு கேள்வியை எழுப்பினார் Christiane Amanpour என்னும் பிரபல ஊடகவியலாளர்.

சமீபத்தில் நீங்கள் அளித்த பேட்டி ஒன்றில், நான் மன்னராகும்போது பல மாற்றங்களைச் செய்வேன் என்று கூறியுள்ளீர்கள்.
உங்கள் குடும்பத்திலேயே பல மாற்றங்கள் சமீபத்தில் ஏற்பட்டுள்ளன அது குறித்து கொஞ்சம் சொல்லுங்கள் என்றார் Christiane Amanpour.
அவர் ஆண்ட்ரூ குறித்துதான் கேள்வி எழுப்புகிறார் என்பது வில்லியமுக்கும் தெரியும், அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக உட்கார்ந்திருந்தவர்களுக்கும் தெரியும்.
ஆக, அவரது கேள்விக்கு பதிலளித்த வில்லியம், மாற்றங்களைக் குறித்து பேசுவதை விட, மாற்றங்களைச் செய்யவே நான் விரும்புகிறேன், அதைத்தான் இந்த பரிசு வழங்கும் விழாவிலும் நாம் செய்துகொண்டிருக்கிறோம். என்னால் அல்ல, இங்குள்ள மக்களால் மாற்றங்கள் ஏற்படும். நான் அப்படிப்பட்டவர்கள் என்னை சூழ்ந்திருப்பதையே விரும்புகிறேன் என்றார்.
அவர் அழகாக சமாளித்ததைக் கண்ட மக்கள் உற்சாகக் கரவொலி எழுப்ப, Christiane Amanpour தன் நோக்கம் நிறைவேறாததால் ஏமாற்றம் அடைந்ததை அவாரது முகமே காட்டியது.
கடைசிவரை, ஆண்ட்ரூ குறித்து ஒரு வார்த்தை கூட பேசாத வில்லியம், நான் என்னைச் சுற்றி மாற்றங்களை உருவாக்கக்கூடிய, உலகுக்கு நல்லது செய்யக்கூடிய மக்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
வில்லியமுடைய பதிலை ராஜகுடும்ப நிபுணர்கள் பலர் பாராட்டியுள்ளார்கள். இளவரசர் ஹரியைப்போல ராஜகுடும்ப மானத்தை காற்றில் பறக்கவிடும் ஆள் அல்ல என்கிறார் ஒருவர்.
எப்படியாயினும், இளவரசர் ஆண்ட்ரூ ராஜகுடும்பத்துடன் ஒட்டிக்கொண்டிருக்கும் வரை, அவரது செயல்கள் தொடர்ந்து ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைத்தான் கொண்டுவரும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |