பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கலை உருவாக்கியுள்ள எப்ஸ்டீன் கோப்புகள்
அமெரிக்க நீதித்துறை, வேலை தருவதாக வாக்களித்து, பருவம் எய்தாத சிறுமிகள் முதல், இளம்பெண்கள் வரை, ஏராளமானோரை சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்னும் நபர் தொடர்பிலான ஆவணங்களை, எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் பெயரில் வெளியிட்டுவருவது அனைவரும் அறிந்ததே.

அந்த ஆவணங்களால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்கள்.
இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சில ஆவணங்களால், பிரித்தானிய இளவரசிகளாகிய பீட்ரைஸ் மற்றும் யூஜீனிக்கு சிக்கல் உருவாகியுள்ளது.
பிரித்தானிய இளவரசிகள் இருவருக்கு சிக்கல்
ஏற்கனவே, மன்னர் சார்லசின் தம்பியான இளவரசர் ஆண்ட்ரூவின் முன்னாள் மனைவியான சாரா ஃபெர்குசன், தன் பிள்ளைகளான இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி குறித்து எப்ஸ்டீனுடன் விவாதித்த தகவல்கள் வெளியாகி பரபரப்பை உருவாக்கின.

இந்நிலையில், அமெரிக்க நீதித்துறை சமீபத்தில் வெளியிட்டுள்ள சில ஆவணங்களிலும் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால் மீண்டும் பரபரப்பு உருவாகியுள்ளது.
அந்த ஆவணங்களில் ஒன்றில், எப்ஸ்டீன் தன் காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், நேற்று சாராவும் அவரது இரண்டு மகள்களும் வந்தார்கள் என குறிப்பிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
அதற்கு முந்தைய தினம், சாரா, எப்ஸ்டீனுக்கு அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றில், நானும் பீட்ரைஸும் யூஜீனியும் வருகிறோம், எந்த முகவரிக்கு வரவேண்டும், நாம் மதிய உணவு சாப்பிட செல்கிறோமா என கேட்டுள்ளார்.

விடயம் என்னவென்றால், இதுவரை, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் பெற்றோரான ஆண்ட்ரூவும் சாராவும் மோசமான பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் தொடர்பிலிருந்ததால் ராஜகுடும்பத்துக்கு அவமானத்தைக் கொண்டுவந்துவிட்டார்கள் என்றும், அதனால், பாவம் அவர்களுடைய அப்பாவி மகள்களின் பெயர்களும் கெடுகின்றன என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவந்தன.
ஆனால், இப்போது இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியும் தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை சந்திக்கச் சென்றதாக சமீபத்திய ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளதால், அவர்களுக்கும் சிக்கல்தான் என்கிறார் ராஜகுடும்ப நிபுணரான ரிச்சர்ட் ஃபிட்ஸ்வில்லியம்ஸ் என்பவர்.
அதாவது, இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி தங்கள் தாயுடன் எப்ஸ்டீனை பார்க்கச் சென்றபோது, அவர் சிறுமி ஒருத்தியை சீரழித்த வழக்குக்காக சிறை சென்று திரும்பியிருந்தார்.
அத்துடன், அவர் வீட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தார். ஆக, தாங்கள் எப்படிப்பட்ட ஒரு நபரை பார்க்கச் செல்கிறோம் என்பதும், அது முறையற்றது என்பதும் அவர்களுக்கு தெரிந்திருக்கும் என்றும் கூறுகிறார் ரிச்சர்ட்.
இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனி, இளவரசர் ஹரிக்குதான் நெருக்கமானவர்கள். இளவரசர் வில்லியமுக்கோ, அவரது மனைவியான கேட்டுக்கோ அவர்கள் நெருக்கமானவர்கள் அல்ல.
ஆக, வெளியாகியுள்ள இந்த தகவலால், ராஜகுடும்பத்துக்குள் இளவரசிகள் பீட்ரைஸ் மற்றும் யூஜீனியின் எதிர்காலம் குறித்து வருங்கால மன்னரான இளவரசர் வில்லியம் வைத்திருந்த திட்டங்கள் மாறக்கூடும் என்கிறார் ரிச்சர்ட்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |