6,000 உறைந்த உடல்கள்... உக்ரேனிய வீரர்களின் சடலங்களைத் திருப்பித்தரும் ரஷ்யா
துருக்கிய நகரமான இஸ்தான்புல்லில் திங்களன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை எந்த பெரிய முன்னேற்றமும் இல்லாமல் முடிந்தது.
அடுத்த வாரத்திற்குள்
ஆனால் இரு தரப்பினரும் மேலும் போர்க் கைதிகளை மாற்றுவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். இந்த ஒப்பந்தத்தின் கீழ், அடுத்த வாரத்திற்குள் கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் சுமார் 6,000 உறைந்த உடல்களை உக்ரேனிடம் ஒப்படைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டது.
ரஷ்யாவின் தலைமை பேச்சுவார்த்தையாளரின் கருத்துப்படி, இரு தரப்பினரும் அனைத்து நோய்வாய்ப்பட்ட மற்றும் பலத்த காயமடைந்த கைதிகளையும், 25 வயதுக்குட்பட்ட கைதிகளையும் பரிமாறிக் கொள்ளவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
சவக்கிடங்குகளில் பாதுகாக்கப்படும் 6,000 உடல்களை முதற்கட்டமாக திருப்பித்தர முடிவெடுத்துள்ளதாகவும், அந்த 6000 பேர்களும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் யார் என்பது உள்ளிட்ட அனைத்து தரவுகளும் திரட்டப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த வாரம், இந்த உடல்களை உக்ரைன் வசம் ஒப்படைக்கப்படும் என்றும், இதனால் அவர்கள் உரிய முறையில் அடக்கம் செய்யலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர். உக்ரைன் வசம் ரஷ்யர்களின் சடலங்கள் பாதுகாக்கபப்ட்டு வருகிறது என்றால், அதை ஏற்றுக்கொள்ள ரஷ்யா தயாராக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிராகரித்து வரும் நிலையில்
ரஷ்ய எல்லைக்குள் ஊடுருவி மிகவும் வெற்றிகரமான ட்ரோன் தாக்குதலை உக்ரைன் நடத்திய ஒரு நாளுக்குப் பிறகு, ரஷ்ய மற்றும் உக்ரேனிய பிரதிநிதிகள் இஸ்தான்புல்லில் இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்காக சந்தித்தனர்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உடனடி போர்நிறுத்தக் கோரிக்கையை ரஷ்யா தொடர்ந்து நிராகரித்து வரும் நிலையில், தெளிவான முடிவை எட்டாமல் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு பேச்சுவார்த்தை முடிவடைந்தது என்றே கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |