சிறுமிகளிடம் சில்மிஷம்... பிரபல கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை
அவுஸ்திரேலிய இளம் கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸ் சிறுமிகளிடம் தகாதமுறையில் நடந்து கொண்டுள்ளது நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆரோன் சம்மர்ஸ், பிக் பேஷ் கிரிக்கெட் தொடரில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக விளையாடியவர். இவர் சமூக வலைத்தளங்களில் சிறுமிகளுக்கு தகாத வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பியுள்ளார்.
மேலும் சிறுமிகளின் புகைப்படங்களை சேகரித்து அவர்களை வெளியே சொல்ல கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் ஆரோன் சம்மர்ஸ் கைது செய்யப்பட்டார்.
அவரிடம் இருந்து சிறார் துஸ்பிரயோகம் தொடர்பான 80 புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பொலிசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் ஆரோன் சம்மர்ஸ் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு அதிகபட்சமாக 4 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக ஆஜரான சட்டத்தரணி ஹன்னா ஒயிட், பெரும்பாலும் எவ்வித குற்றப் பின்னணியும் இல்லாத, நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் நபர்களே இதுபோன்ற குற்றங்களில் இடுபடுவதாகவும், அதற்கு ஆரோன் சம்மர்ஸ் மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்று கூறியுள்ளார்.