முதல் திருமணத்தை மறைத்து... கல்லூரி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி பேராசிரியர் செய்த தில்லு முல்லு!
தமிழகத்தில், கல்லூரியில் பயிலும் மாணவிக்கும், தனக்கும் திருமணம் நடந்தது போல் போலியாக சான்றிதழ் தயாரித்து, மாணவியை மிரட்டிய பேராசிரியர் இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
சென்னை விருகம்பாக்கத்தில் இருக்கும் மீனாட்சி கல்லூரியில் விசுவல் கம்யூனிகேஷன் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ்குமார். அய்யப்பன்தாங்கலை சேர்ந்த இவருக்கும், தன்னிடம் பயிலும் கல்லூரி மாணவிக்கும் இடையே காதல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், சதீஷ்குமாரின் நடவடிக்கைகள் தவறாக இருந்ததால், அவருடன் பழகுவதை, மாணவி நிறுத்தியுள்ளார். ஆனால், சதீஷ்குமாரோ, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை தொந்தரவு செய்துள்ளார். சதீஷ்க்கு ஏற்கனவே திருமணம் ஆனதையும், ஒரு குழந்தை இருப்பதையும் சுட்டிக்காட்டி, மாணவி எச்சரித்துள்ளார்.
பேராசிரியர் என்ற போர்வையை பயன்படுத்தி, மாணவியின் குடும்பத்தினரிடமும் சகஜமாக குடும்ப நண்பர் போல் பழகி வந்த சதீஷ்குமார், தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்ள தில்லு முல்லு வேலையில் ஈடுபட்டுள்ளார்.
மாணவியின் சான்றிதழ்களை திருடி, இருவருக்கும் பதிவுத் திருமணம் நடந்தது போல் போலியாக சான்றிதழ் தயாரித்த அவர், அதனை வைத்து மாணவியை மிரட்டி வந்துள்ளார். மிரட்டலுக்கு மாணவி அடிபணியாததால், குடும்பத்தினரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு போலி திருமணச் சான்றிதழை அனுப்பி வைத்துவிட்டு, தன்னுடன் சேர்ந்து வாழவில்லையென்றால், இந்த போலி சான்றிதழை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி, தியாகராயர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, போலியாக ஆவணங்களை புனைதல், போலி ஆவணங்களின் மூலம் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பது மற்றும் கொலை மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.