அமெரிக்காவின் தடையை மீறி ஹார்முஸில் பயணித்த ரஷ்ய பில்லியனரின் சொகுசுப் படகு
அமெரிக்காவின் தடையை மீறி, ரஷ்ய பில்லியனரின் சொகுசுப் படகு ஒன்று ஹார்முஸில் பயணித்துள்ளது.
அமெரிக்க அரசு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் நெருங்கிய நண்பரான அலெக்ஸி மோர்டஷோவிற்கு (Alexey Mordashov) பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.
இருப்பினும் அந்த தடையை மீறி, அவருக்கு தொடர்புடைய 'Nord' என்ற பிரமாண்ட சொகுசுப் படகு (Yacht) ஹார்முஸ் நீரிணையை சனிக்கிழமையன்று கடந்துள்ளது.
சுமார் 500 மில்லியன் டொலர் மதிப்புடைய, 142 மீட்டர் நீளமுடைய இந்த சொகுசுப் படகு, துபாயின் மரினாவிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை புறப்பட்டுள்ளது.

சனிக்கிழமையன்று ஹார்முஸ் நீரிணையை கடந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஓமன் தலைநகர் மஸ்கட் வந்தடைந்ததாக கடல் போக்குவரத்து தரவுகள் தெரிவிக்கின்றன.
ஹார்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எரிபொருள் போக்குவரத்து பாதையாகும். உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் ஐந்தில் ஒரு பங்கு இங்கு வழியாக செல்கிறது.
அமெரிக்கா, ஈரான் துறைமுகங்களுக்கு தடையை அறிவித்ததையடுத்து, கடல் போக்குவரத்து மிகக் குறைந்த நிலையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில், தடைவிதிக்கப்பட்ட நபரின் 500 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொகுசுப் படகு தடையை மீறி பயணம் செய்தது உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த படகில் நீச்சல் குளம், ஹெலிபாட், சிறிய நீர்மூழ்கிக் கப்பல் போன்ற வசதிகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மோர்டஷோவ், ரஷ்யாவின் முக்கிய எஃகு நிறுவனமான 'Severstal' நிறுவனத்தின் தலைவர் ஆவார். அவர் மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா ஆகிய நாடுகள் 2022-இல் உக்ரைன் போருக்குப் பிறகு தடைகளை விதித்துள்ளன.
இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#Putin #Superyacht #HormuzStrait #USIranTensions #AlexeyMordashov #GlobalOil #RussiaNews #Geopolitics