பிரித்தானியாவுக்கு ஆபத்து... களமிறங்கும் புடினின் நாசகாரர்கள் படை: எச்சரிக்கும் நிபுணர்கள்
பிரித்தானியாவை உக்ரைனுக்கு பிறகு முதன்மை இலக்காக ரஷ்ய பாதுகாப்பு நிபுணர்கள் பார்ப்பதால், விளாடிமிர் புடினின் நாசகாரர்களின் படையை நாட்டில் களமிறக்க வாய்ப்பிருப்பதாக நிபுணர்கள் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரண்டு மாதங்கள் கடந்து நீடித்து வருகிறது. உலகின் பெரும்பாலான நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது. இந்தியா, சீனா உள்ளிட்ட குறிப்பிட்ட சில நாடுகள் மட்டும், ரஷ்ய ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படையாக கூற மறுத்து வருவதுடன், நடுநிலை என தெரிவித்துள்ளது.
ஆனால், பிப்ரவரி 24 ம் திகதி ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கியதில் இருந்து பிரித்தானியா உக்ரைனுக்கு ஆதரவை வழங்கி வருகிறது. ஆயுதங்கள், உளவுத்துறை உதவி அல்லது நிதியுதவி என உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கி வருவது ரஷ்ய இராணுவம் மற்றும் பாதுகாப்பு நிபுணர்களின் கோபத்தைத் தூண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனாலையே பிரித்தானியாவை ரஷ்ய உளவுத்துறை முக்கிய இலக்காக பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் Ed Johnson என்பவர் ரஷ்யா தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விளாடிமிர் புடினின் நாசகாரர்கள் படையானது (Army of saboteurs) பிரித்தானியா மற்றும் பிரித்தானிய அரசாங்கத்தில் ஊடுருவி குழப்பம், பீதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தக் கூடும் என எச்சரித்துள்ளார்.
இது, பிரித்தானியாவின் உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதலாகவோ, அல்லது முக்கிய நபர்கள் மீதான தாக்குதலாகவோ அல்லது இணையமூடாக முன்னெடுக்கப்படும் தாக்குதலாகவோ இருக்கலாம் என Ed Johnson குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், உளவுத்துறை அதிகாரிகள் அல்லது அரசாங்க அதிகாரிகள் மீது அவர்கள் இலக்கு வைக்கலாம். மேலதிகமாக, இரகசிய ஆவணங்களை வெளியிட்டு, மக்கள் மத்தியிலும் அரசாங்கத்திலும் குழப்பத்தை அவர்கள் ஏற்படுத்தலாம் என Ed Johnson எச்சரித்துள்ளார்.