இஸ்ரேல் தாக்குதல்... ட்ரம்பை தொலைபேசியில் அழைத்து கண்டனம் தெரிவித்த விளாடிமிர் புடின்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை தொடர்புகொண்டு 50 நிமிடங்கள் பேசிய வில்ளாடிமிர் புடின் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையை கண்டித்துள்ளார்.
போர் மூளும் அபாயம்
அமெரிக்க ஆதரவு இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளால் போர் மூளும் அபாயங்கள் குறித்தும் விளாடிமிர் புடின் கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்ய ஜனாதிபதி மாளிகை உதவியாளர் யூரி உஷாகோவ் தெரிவிக்கையில்,
ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை விளாடிமிர் புடின் கண்டித்ததோடு, மத்திய கிழக்கில் கணிக்க முடியாத விளைவுகளை இஸ்ரேலின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தக் கூடும் என்றும் புடின் கவலை தெரிவித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி, மத்திய கிழக்கில் நடக்கும் நிகழ்வுகள் மிகவும் கவலையளிக்கும் வகையில் இருப்பதாக ட்ரம்பும் தெரிவித்ததாக யூரி உஷாகோவ் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைக்கு அவர்கள் திரும்ப வேண்டும் என இரு தலைவர்களும் கூறியதாக உஷாகோவ் தெரிவித்துள்ளார்.
ட்ரம்பின் மிரட்டல்
அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையை தொடர தயாராகவே இருப்பதாக அறிவித்திருந்தும், அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் முன்னெடுத்த தாக்குதலை அடுத்து, ஞாயிறன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ஈரான் ரத்து செய்துள்ளது.
இதனிடையே, ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பதற்றத்தைத் தணிப்பதற்கும் ரஷ்யா உதவ தயாராக இருப்பதாக புடின் ட்ரம்பிடம் தெரிவித்துள்ளார்.
உண்மையில் ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் மிரட்டலை அடுத்தே, அமெரிக்க ஆதரவு இஸ்ரேல் தற்போது ஈரான் மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
மட்டுமின்றி, ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளிப்படையாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |