அன்று புடின் கொலையாளி! இன்று அவருடன் சந்திப்பு: ஜோ பைடன் அப்போதைய பேட்டி குறித்து பதில் அளித்த புடின்
தன்னை கொலையாளி என்று ஜோ பைடன் கூறிய நிலையில், அதற்கு அவர் கூறிய விளக்கத்தால், தான் திருப்தியடைந்ததாக ரஷ்ய அதிபர் புடின் கூறியுள்ளார்.
அமெரிக்காவை பொறுத்தவரை, சீனா, ஈரான், மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் தங்கள் நாட்டின் பாதுகாப்பு எதிராக உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறது.
குறிப்பாக, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருப்பதாக கூறப்பட்டது. இதனால், தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பிரச்னைகள் இருந்து வருகிறது.
இரு நாடுகளுக்கும்இடையே நல்லுறவை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அதிபர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், நேற்று ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், உச்சி மாநாடு துவங்கியது.
இதில் பங்கேற்க சென்ற அமெரிக்க ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் ஒருவரை ஒருவர் நேரடியாக சந்தித்து, கை குலுக்கி பேசிக் கொண்டனர்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கிடையேயான பிரச்சனையை முடித்து வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தைக்கு பின் இருவரும் தனித்தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, கடந்த மார்ச் மாதம் ஒளிபரப்பட்ட நேர்காணலில், ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி மற்றும் பிற எதிர்ப்பாளர்களுக்கு புடின் விஷம் தந்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது.
இதனை குறிப்பிட்டு, அவரை கொலையாளி என நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் ஜோ பைடனிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பைடன் ஆம் அப்படி தான் நினைக்கிறேன் என்றார். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஜோ பைடனின் இந்த பேட்டிக்கு பின், வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதர் அனடோலி அண்டனோவை மாஸ்கோவிற்கு அழைக்கப்பட்டார். தற்போதைய சூழலில் அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய அவரை அழைத்திருப்பதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியிருந்ததுது
இது குறித்து இன்று அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அந்த ஒளிபரப்பலுக்கு பின் ஜோ பைடன் எனக்கு போன் செய்து பேசினார். இது குறித்து நாங்கள் இருவரும் சில விஷயங்களை பேசிக் கொண்டோம். அதில், அவர் அது குறித்து என்னிடம் கொடுத்த விளக்கம், திருபதியாக இருந்தது என்று புடின் கூறினார்.
ஆனால் என்ன பேசினோம் என்பதை அவர் தெளிவாக சொல்லவில்லை. மேலும், அமெரிக்க அதிகாரிகளால் ஏராளமான மனித உரிமை மீறல்கள் நடப்பதை சுட்டிக் காட்டிய அவர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு யார் காரணம்? இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்? கொலைகாரன் யார்? என்று கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் காரணமாக, இருநாட்டு தூதரகளும், தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பிய நிலையில், இவர்களின் சந்திப்புக்கு பின் இருநாட்டு தூதர்களும் மீண்டும் திருப்பி அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக புடின் தெரிவித்தார்..
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசிக் கொண்டாலும், கடந்த 2011-ஆம் ஆண்டு ஜோ பைடன் துணை அதிபராகவும், புடின் ரஷ்ய பிரதமராக இருந்த போதும் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டது நினைவுகூரத்தக்கது.