புடின் குறிவைக்கும் அடுத்த நாடு: எச்சரிக்கும் அமெரிக்க முன்னாள் ஜெனரல்
புடின் உக்ரைனுக்கு அடுத்தபடியாக மற்றொரு ஐரோப்பிய நாட்டின்மீது கண் வைத்துள்ளதாக எச்சரிக்கிறார் அமெரிக்க முன்னாள் ஜெனரல் ஒருவர்.
எச்சரிக்கும் அமெரிக்க முன்னாள் ஜெனரல்
அமெரிக்க ராணுவத்தில் ஜெனரலாக பதவி வகித்தவரும், மத்திய உளவுத்துறை ஏஜன்சியின் முன்னாள் இயக்குநருமான ஜெனரல் டேவிட் (General David Petraeus) என்பவர், புடினுடைய நோக்கம் உக்ரைனின் சில பகுதிகளைக் கைப்பற்றுவது அல்ல என்கிறார்.
முழு உக்ரைனையும் கைப்பற்றி, உக்ரைன் ஜனாதிபதியான வோலொடிமிர் ஜெலன்ஸ்கியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ரஷ்ய கைப்பாவையாகிய ஒருவரை உக்ரைன் ஜனாதிபதியாக ஆக்குவதுதான் புடினுடைய திட்டம் என்கிறார் ஜெனரல் டேவிட்.
மேலும், புடின் உக்ரனுடன் நிறுத்தமாட்டார் என்றும், அடுத்ததாக அவர் மற்றொரு ஐரோப்பிய நாட்டின்மீது குறிவைத்துள்ளார் என்றும் கூறுகிறார் ஜெனரல் டேவிட்.
புடினுடைய பேச்சில் அடிக்கடி இடம்பெறும் ஒரு நாட்டின் பெயர் லிதுவேனியா என்று கூறும் ஜெனரல் டேவிட், காரணம், லிதுவேனியா ரஷ்யாவுடனான ஆற்றல் தொடர்புகளை துண்டித்துவிட்டு, உறுதியாக உக்ரைனுக்கு ஆதரவளிக்கிறது.
ஆக, லிதுவேனியா முதலான நாடுகளுக்கு நேட்டோ தீவிரமாக உதவவேண்டும் என்கிறார் ஜெனரல் டேவிட். இன்னொரு முக்கிய விடயம், 2005ஆம் ஆண்டு புடின் நாட்டுக்கு ஆற்றிய உரையின்போது, சோவியத் யூனியனின் வீழ்ச்சி ரஷ்ய மக்களுக்கு ஒரு துயரமான விடயம் என்று கூறியிருந்தார்.
Image: Lithuanian Defence Ministry
அத்துடன், என்ன பேசினாலும், சோவியத் யூனியன் என்னும் ஒரு விடயம் அவரது பேச்சில் இடம்பெற்றுவிடுகிறது.
ஆக, முன்னர் சோவியத் யூனியனிலிருந்த நாடுகளை மீண்டும் இணைத்து சோவியத் யூனியனை உருவாக்கும் எண்ணம் புடினுக்கு உள்ளது.
ஆகவே, பால்டிக் நாடுகள் என அழைக்கப்படும் எஸ்தோனியா, லாத்வியா மற்றும் லிதுவேனியா போன்ற நாடுகளுக்கு புடினால் அபாயம் உள்ளது என்பதையே ஜெனரல் டேவிடின் எச்சரிக்கை சுட்டிக்காட்டுகிறது எனலாம்.