உக்ரைனில் போரிட கைதிகளை ஊதியத்திற்கு களமிறக்கும் ரஷ்யா: பரிதாப நிலையில் புடின் இராணுவம்
உக்ரைனில் சிறை கைதிகளை களமிறக்கி போரை நீட்டிக்கும் முயற்சியில் ரஷ்யா திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கைதிகள் உக்ரைனில் இருந்து 6 மாதங்களுக்கு பிறகு உயிருடன் திரும்பி வந்தால் அவர்களின் தண்டனைக் காலம் ரத்து செய்யப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சிறைகளில் இருந்தே தற்போது கைதிகளை தெரிவு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு வெகுமதியாக 3,000 பவுண்டுகள் வரையில் அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனில் இவர்கள் முன்வரிசையில் களமிறக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கமான தனியார் இராணுவப்படை நிறுவனமான Wagner இந்த நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, முன்பு புடின் தலைமையேற்றிருந்த எஃப்.எஸ்.பி பாதுகாப்பு சேவையும் இந்த நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒவ்வொருவருக்கும் அதிகபட்சமாக 200,000 ரூபிள் வெகுமதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கைதிகளில் எவரேனும் உக்ரைன் போரில் கொல்லப்பட்டால் அவர்களின் குடும்பத்தினருக்கு 70,000 பவுண்டுகள் வரையில் வெகுமதியாக அளிக்க உறுதி செய்துள்ளனர்.
மட்டுமின்றி, கொடும் குற்றங்கள் செய்து 20 ஆண்டுகளுக்கு மேல் தண்டை அனுபவிக்கும் கைதிகளுக்கு இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கைதிகளின் குடும்பத்தினர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், 6 மாதங்களுக்கு பிறகும், ரஷ்ய இராணுவத்திற்காக செயல்பட விரும்பும் கைதிகளுக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.