வாக்னர் கூலிப்படை சட்டவிரோத அமைப்பு... ரஷ்ய ஜனாதிபதி புடின் சூசகம்
ரஷ்ய தலைமைக்கு எதிராக வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சி தோல்வியில் முடிவடைந்த பின்னர், அதன் தலைமையை நீக்கும் நடவடிக்கையில் தாம் தோல்வி கண்டதாக விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டுள்ளார்.
புடினின் இயலாமையை வெளிப்படுத்துவதாக
வாக்னர் கூலிப்படையை கைப்பற்றும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக விளாடிமிர் புடின் கூறியிருப்பது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. வாக்னர் கூலிப்படையின் ஆயுத கிளர்ச்சி என்பது விளாடிமிர் புடினின் இயலாமையை வெளிப்படுத்துவதாக பலர் விளக்கமளித்திருந்தனர்.
@reuters
வெள்ளிக்கிழமை தான், பெலாரஸ் ஊடகங்கள் வெளிப்படையாக வாக்னர் கூலிப்படையினர் அந்த நாட்டிற்குள் நுழையும் தகவலை வெளியிட்டுள்ளனர். ஆயுத கிளர்ச்சிக்கு பின்னர், நாட்டைவிட்டு வெளியேறும் நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து, பெலாரஸ் நாட்டிற்கு செல்லும் முடிவை ரஷ்ய தலைமையிடம் வாக்னர் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆயுத கிளர்ச்சி தோல்வியில் முடிந்ததை அடுத்து, எவ்ஜெனி பிரிகோஜின் மற்றும் 35 வாக்னர் தளபதிகளை ஜனாதிபதி மாளிகையில் சந்தித்ததாகவும், உக்ரைனில் தொடர்ந்து போரிடுவது தொடர்பான விதிமுறைகள் குறித்து விவாதித்ததாகவும் விளாடிமிர் புடின் முதன்முறையாக வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், இந்த சந்திப்பின் போது, வாக்னர் படையினர் தொடர்ந்து உக்ரைனில் போரிடுவதற்கான கோரிக்கையை முன்வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், தமது கோரிக்கையை வாக்னர் தளபதிகள் ஏற்றுக்கொண்டாலும், எவ்ஜெனி பிரிகோஜின் மறுப்பு தெரிவித்ததாக புடின் குறிப்பிட்டுள்ளார்.
வாக்னர் அமைப்பு செயற்பாட்டில் இல்லை
மட்டுமின்றி, கிளர்ச்சிக்கு பின்னர் ரஷ்யாவில் வாக்னர் என்ற அமைப்பு செயற்பாட்டில் இல்லை எனவும் புடின் குறிப்பிட்டுள்ளார். இது வாக்னர் கூலிப்படையின் எதிர்கால செயற்பாட்டினை கேள்விக்குறியாக்கியுள்ளதாக கூறுகின்றனர்.
@getty
இதனிடையே, பிரிகோஜினுக்கும் அவரது படையினருக்கும் இடையே பிளவை ஏற்படுத்த ரஷ்யா முற்படும் நிலையில் எந்த நேரத்திலும் வாக்னர் கூலிப்படையை சட்டவிரோத அமைப்பு என புடினால் அறிவிக்க முடியும் என ராணுவ நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
வாக்னர் கூலிப்படையின் சேவை தமக்கு தேவை என்பதையும், ஆனால் அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் சேவை ரஷ்யாவுக்கு தேவை இல்லை என்ற முடிவுக்கு புடின் வந்துள்ளார் என்றே கூறுகின்றனர்.
மேலும், பிரிகோஜின் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது, பிடினுக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், அடுத்த நடவடிக்கைகள் கடுமையானதாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |