பிரித்தானியாவை கடலில் மூழ்கடித்துவிடுவோம்: மீண்டும் அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ள புடின் ஆதரவாளர்
ரஷ்யா தொடர்ந்து மேற்கத்திய நாடுகளுக்கு அணு ஆயுத மிரட்டல் விடுத்துக்கொண்டே இருக்கிறது.
மீண்டும் அணு ஆயுத மிரட்டல்
ரஷ்யாவைத் தோற்கடிக்க மேற்கத்திய நாடுகள் எடுக்கும் எந்த முயற்சியும் இறுதி யுத்தத்தில் முடியக்கூடும் என மிரட்டல் விடுத்துள்ளார், புடின் ஆதரவாளரான Dmitry Kiselyov என்னும் ஊடகவியலாளர்.
அரசு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய Dmitry, ரஷ்யாவைத் தோற்கடிப்பதற்காக, நேட்டோ நாடுகள் தங்கள் படைகளை உக்ரைனுக்கு அனுப்புமானால், அனைத்து வகையான ஏவுகணைகளும், அனைத்து திசைகளிலும் ஏவப்படும் என்று எச்சரித்துள்ளார்.
ரஷ்யா என்று ஒன்று இல்லையென்றால், உலகம் என்ற ஒன்று எதற்காக? என ஒருமுறை புடின் கேள்வி எழுப்பியிருந்தார். அந்த தருணம் உண்மையாகிவிடும் என்கிறார் Dmitry.
Credit: East2West
பிரித்தானியாவை கடலில் மூழ்கடித்துவிடுவோம்
அமெரிக்கா, பிரான்ஸ் என ஒரு நாட்டையும் விடமாட்டோம் என்று கூறும் Dmitry, பிரித்தானிய தீவுகள் கடலுக்குள் மூழ்கடிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதற்குத் தேவையான அனைத்து தொழில்நுட்பமும் எங்களிடம் உள்ளது என்று கூறியுள்ள Dmitry, ஆகவே, அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுப்பது நல்லது என்கிறார்.
Credit: AFP
விடயம் என்னவென்றால், Dmitry பிரித்தானியாவை மூழ்கடித்துவிடுவதாக மிரட்டுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே, ரஷ்யாவின் Poseidon என்னும், தண்ணீருக்கடியில் இயங்கும் அணு ஆயுதம் மூலம் தாக்கி, சுனாமியை வரவழைத்து பிரித்தானியாவை தண்ணீரில் மூழ்கடித்துவிடுவோம் என்றும், மிச்சம் மீதி நிலப்பரப்பு இருந்தாலும், அது யாருக்கும் பயன்படாத அணுக்கதிர் வீச்சு கொண்ட பாலைவனமாகத்தான் இருக்கும் என்றும் Dmitry மிரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |