இது வெறும் ஒத்திகைதான்... ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் பிரச்சினை இனிதான் ஆரம்பம்: புடின் ஆதரவாளர் எச்சரிக்கை
உக்ரைன் போர் வெறும் ஒத்திகைதான், ரஷ்யாவுக்கும் நேட்டோ நாடுகளுக்கும் இடையிலான பெரிய பிரச்சினை இனிதான் ஆரம்பம் என்று கூறியுள்ளார் புடின் ஆதரவாளர் ஒருவர்.
மாஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் உலக அரசியல் பிரிவில் இணை பேராசிரியராகவும், சர்வதேச பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தில் ஆய்வாளர்களில் ஒருவராகவும் இருக்கும் Alexei Fenenko என்பவர் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் நடக்கும் போர், எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு பெரிய போருக்கு ஒத்திகை என நான் நினைக்கிறேன் என்று கூறியுள்ள Fenenko, நாங்கள் நேட்டோ அமைப்பின் ஆயுதங்களுக்கு எதிராக எங்கள் ஆயுதங்களை சோதித்து வருகிறோம். அதன்மூலம் எங்கள் ஆயுதங்கள் அவர்களுடைய ஆயுதங்களைவிட எவ்வளவு வலிமையானவை என நாங்கள் கண்டுபிடிப்போம் என்று கூறியுள்ளார்.
எதிர்கால போர்களுக்கு இது ஒரு நல்ல பயிற்சி அனுபவமாக இருக்கக்கூடும் என்கிறார் Fenenko.
ஒரு பக்கம் இப்படியே அவ்வப்போது புடின் ஆதரவாளர்கள் மிரட்டல் தொனியில் தொலைக்காட்சியில் புதிது புதிதாக கதைகள் விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், மறு பக்கமோ ரஷ்யா ஏற்கனவே 28,000க்கும் அதிகமான போர்வீரர்களையும், ஆயிரக்கணக்காக இராணுவ வாகனங்களையும் இழந்துவிட்டதாக உக்ரைன் படைகளின் சமீபத்திய தரவுகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.