மாயமான தாயார்... 20 அடி ராட்சத மலைப்பாம்பால் அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்
இந்தோனேசியா கிராமம் ஒன்றில் தாயார் ஒருவர் திடீரென்று மாயமான நிலையில், 20 அடி ராட்சத மலைப்பாம்பு ஒன்றை அடையாளம் கண்டு கிராம மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
உயிருடன் விழுங்கியதாக
நான்கு பிள்ளைகளின் தாயாரை அந்த ராட்சத மலைப்பாம்பு உயிருடன் விழுங்கியதாக கிராம மக்கள் கூறுகின்றனர். 50 வயதான ஃபரிதா என்பவர் Kalempang பகுதியில் அமைந்துள்ள சந்தையில் உணவு பண்டங்களை விற்பனை செய்யும் பொருட்டு ஜூன் 6ம் திகதி, காட்டு வழியாக சென்றுள்ளார்.
ஆனால் அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இதனையடுத்து கவலையடைந்த ஃபரிதாவின் கணவர் மற்றும் கிராம மக்கள் அந்த நாள் இரவு தொடங்கி காட்டு வழியெங்கும் தேடத் தொடங்கினர்.
இந்த நிலையில், அடுத்த நாள் பகல் வீங்கிய வயிறுடன் ராட்சத மலைப்பாம்பு ஒன்றை கண்டுபிடித்தனர். தாங்கள் தேடும் ஃபரிதாவை பாம்பு விழுங்கியிருக்கலாம் என்று முடிவு செய்த கிராம மக்கள் வாளால் அதன் வயிற்றுப்பகுதியை கிழித்துள்ளனர்.
ராட்சத மலைப்பாம்பு
அப்போது பாம்பின் வயிற்றில் சேறு படிந்த நிலையில் பெண்ணின் உடல் காணப்பட்டது. ஃபரிதா மூச்சுத்திணறல் மற்றும் காலில் அந்த பாம்பு கடித்ததால் இறந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது.
ஃபரிதாவின் உடல் பாம்பின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்டு, மத ரீதியாக அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
இந்தோனேசியாவில் இதற்கு முன்னர் கடந்த 2018 மற்றும் 2022ல் இதேப் போன்று காட்டு வழியாக பயணப்பட்ட பெண்கள் இருவரை ராட்சத மலைப்பாம்பு விழுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |