கத்தார் எரிவாயு ஏற்றுமதி 17% பாதிப்பு: சிக்கலில் இந்தியா, சீனா மற்றும் ஆசிய நாடுகள்
கத்தாரின் எரிசக்தி தொழிற்சாலைகள் மீது ஈரான் நடத்திய தாக்குதல் காரணமாக அந்த நாட்டின் இயற்கை எரிவாயு ஏற்றுமதி 17% பாதிக்கப்பட்டுள்ளது.
17 எரிவாயு ஏற்றுமதியில் சிக்கல்
கத்தாரின் கடற்கரையை ஒட்டியுள்ள ராஸ் லபான் தொழில்துறை நகரம் மீது ஈரான் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியது.
இதில் ராஸ் லபான் தொழில்துறை நகரில் அமைந்திருந்த உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஆலை(LNG) மற்றும் எரிவாயுவிலிருந்து திரமாக்கும் ஆலை இரண்டும் பலத்த சேதமடைந்தன.

இதனால் எரிவாயு உற்பத்தி பாதிக்கப்பட்டு இருப்பதுடன், கத்தாரின் திரவ இயற்கை எரிவாயு ஏற்றுமதியும் கிட்டத்தட்ட 17 சதவீதம் தடைப்பட்டுள்ளது.
அத்துடன் கத்தாரின் ஆண்டு வருமானத்தில் இதனால் கிட்டத்தட்ட 20 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டின் எரிசக்தி விவகாரங்களுக்கான அமைச்சர் சாத் அல்-காபி தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரான் நடத்திய இந்த ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டுள்ள சேதம், கட்டமைப்புகளை 20 ஆண்டுகள் வரை பின்னுக்கு தள்ளி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிக்கலில் இந்தியா, சீனா
எரிவாயு ஆலைகளில் ஏற்பட்டுள்ள சேதங்களை சரி செய்வதற்குள், அதாவது 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் சர்வதேச அளவில் சுமார் 1.28 கோடி டன் திரவ மயமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு ஏற்றுமதி முடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்தியா, சீனா, ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதி மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும்.
அதே போல இத்தாலி, பெல்ஜியம், தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளுடனான எரிவாயு ஒப்பந்தத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த சேதங்களால் தொடர முடியாது என்றும் கத்தார் அரசு தெரிவித்துள்ளது.
இந்தியா தன்னுடைய எரிவாயு தேவையில் 40% கத்தாரிடம் இருந்தே இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |