வெனிசுலா நிலநடுக்கம்... அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட பகீர் தகவல்
புதன்கிழமையன்று வெனிசுலாவில் ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 700 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
10,000 தாண்டும்
தலைநகர் கராகஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் டசின் கணக்கான கட்டிடங்கள் நொறுங்கி கான்கிரீட் மற்றும் எஃகு குவியல்களாகச் சரிந்து விழுந்துள்ளன.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் தகவலின்படி, கராகஸுக்கு மேற்கே சுமார் 160 கி.மீ (100 மைல்) தொலைவில் 7.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டது; அதைத் தொடர்ந்து ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் 7.5 ரிக்டர் அளவுள்ள மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கையை மதிப்பிடுவதற்கு முன்கணிப்பு மாதிரியைப் பயன்படுத்திய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம், உயிரிழப்புகள் பெரும்பாலும் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றும், 10,000-ஐத் தாண்டுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.
இதனிடையே, மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா மாகாணத்தைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை, ஆரம்பகட்ட உயிரிழப்பு புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படவில்லை என்று இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் கூறியுள்ளார்.
மேலும், டசின் கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன; எத்தனை உயிர்களைக் காப்பாற்ற முடியுமோ, அத்தனை உயிர்களைக் காப்பாற்ற நாங்கள் தற்போது தீவிர மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

மீட்புப் பணிகளில்
பொது விடுமுறை நாளன்று பிற்பகலில் பல வெனிசுலா மக்கள் தங்கள் வீடுகளில் இருந்த நிலையிலேயே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை அதிகாலை வரை தலைநகரில் நில அதிர்வுகள் தொடர்ந்து நீடித்தன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த ரோட்ரிக்ஸ், பிற நாடுகளிலிருந்து மீட்புக் குழுவினர் அடுத்த சில மணிநேரங்களில் வருகை தருவது உட்பட, மீட்புப் பணிகளில் நாடு கவனம் செலுத்தி வருவதாகக் கூறினார்.
கரிபியன் தட்டும் தென் அமெரிக்கத் தட்டும் சந்திக்கும் நிலநடுக்கச் செயல்பாடு மிகுந்த மண்டலத்தில் வெனிசுலா அமைந்துள்ளது. 1812-ஆம் ஆண்டில் மெரிடா மற்றும் கராகஸ் நகரங்களில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பரவலான அழிவை ஏற்படுத்தியபோது, சுமார் 30,000 பேர்கள் மரணமடைந்தனர்.

தற்போதும் மிக மோசமான சேதங்கள் ஏற்பட்டுள்ளதால், இறப்பு எண்ணிக்கை எதிர்பாராத அளவுக்கு அதிகரிக்கும் என்றே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |