ராணியாரின் உடலுக்கு இறுதி மரியாதை... தடை விதிக்கப்பட்ட முக்கிய நாட்டின் பிரதிநிதிகள்?
சீனத்து பிரதிநிதிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி
ராணியாரின் இறுதிச்சடங்கானது பிரித்தானியாவை பொறுத்தமட்டில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று
ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் சீனத்து பிரதிநிதிகளை, இறுதி மரியாதை செலுத்த அனுமதிப்பதில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சித்ததற்காக பல பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சீனாவால் தடை விதிக்கப்பட்ட நிலையில், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சீனாவிலிருந்து பிரதிநிதிகளை அழைப்பது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
@reuters
ஆனால் சின்ஜியாங்கில் மனித உரிமை மீறல்கள் எதுவும் நடந்ததில்லை என சீனா கூறி வருகிறது. இந்த நிலையில், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் சீனத்து பிரதிநிதிகளை அனுமதிப்பதில்லை என்ற முடிவுக்கு அரசாங்கம் வந்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் பிரதமர் லிஸ் ட்ரஸ்ஸின் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், வெளியுறவு அலுவலகத்தின் ஆலோசனைக்குப் பிறகு, பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரிகளே விருந்தினர் பட்டியலை அமைக்கும் என்று கூறியுள்ளார்.
@reuters
மட்டுமின்றி, தங்களுடன் இராஜதந்திர உறவுகளைக் கொண்ட நாடுகளின் பிரதிநிதிகளையே பிரித்தானியா அழைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, இதுபோன்ற ஒரு தகவல் தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார்.
மேலும், ராணியாரின் இறுதிச்சடங்கானது பிரித்தானியாவை பொறுத்தமட்டில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று. ராணியார் மீதான மரியாதை நிமித்தமே, வெளிநாட்டு பிரதிநிதிகளை பிரித்தானியா அழைத்துள்ளது என்றார் மாவோ நிங்.
மட்டுமின்றி, பிரித்தானியா இராஜதந்திர நெறிமுறைகளையும் விருந்தினர்களுக்கு முறையான மரியாதையும் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
@AP
எதிர்வரும் திங்கட்கிழமை முன்னெடுக்கப்படும் ராணியாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உலக நாடுகளில் இருந்து பல தலைவர்கள், ராஜகுடும்ப உறுப்பினர்கள் என வருகைதர உள்ளனர்.
சீனாவின் துணை ஜனாதிபதி Wang Qishan இதில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டு, ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.