எனக்கு எரிச்சல் உணர்வுதான் ஏற்படுகிறது... முதல் முறையாக நேரலையில் கோபத்தை வெளிப்படுத்திய பிரித்தானிய மகாராணியார்
இன்றைய நிலவரப்படி, சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்துப் பேச ஏராளமானோர் இருக்கிறார்கள்.
ஆனால், அதற்கான நடவடிக்கை எடுக்கும் திறன்படைத்தவர்கள் கூட, பேசுகிறார்களேயொழிய செயலில் ஒன்றையும் காணோம்.
நம்மில் பலர் இப்படி உணர்ந்திருப்போம். கோபமும் அடைந்திருப்போம். ஆனால், நம் உணர்வுகளுக்கு மதிப்பேது?.
ஆனால், இப்போது மிகப்பெரிய பதவியில் அமர்ந்திருக்கும் ஒருவர், முதல் முறையாக இந்த விடயம் குறித்து தன் உணர்வுகளை வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர், பிரித்தானிய மகாராணியாரான இரண்டாம் எலிசபெத்! COP26 என்று அழைக்கப்படும், 2021ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சீதோஷ்ண மாற்ற மாநாடு ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில், அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை, பிரித்தானியாவின் தலைமையில் நடைபெற உள்ளது.
ஆனால், அந்த மாநாட்டில் சீன அதிபரான ஸீ ஜின்பிங் கலந்துகொள்வதைத் தவிர்க்க வாய்ப்புள்ளதாக பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.
உலகின் கார்பன் வெளியேற்றத்தில் 27 சதவிகிதத்துக்குக் காரணமான சீனா அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லையென்றால், புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரியாக கட்டுப்படுத்தும் திட்டத்துக்கு சீனா எப்படி கட்டுப்படும் என்பது பெரும் கேள்விக்குறியாகிறது.
மேலும், அந்த மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரேசில் அதிபரான ஜெய்ர் போல்சனாரோ ஆகியோர் இதுவரை உறுதியான முடிவு எதுவும் தெரிவிக்கவில்லை.
அதுதான் மகாராணியாரின் எரிச்சலுக்குக் காரணம். வேல்ஸ் நாடாளுமன்றத்தைத் துவக்கி வைப்பதற்காக வேல்ஸ் தலைநகர் கார்டிஃப்க்கு சென்றிருந்தபோதுதான் மகாராணியார் தனது எரிச்சலை வெளிப்படுத்தினார்.
நாடாளுமன்ற சபாநாயகர் எலின் ஜோன்ஸ் மற்றும் தனது மருமகளும் இளவரசர் சார்லசின் மனைவியுமான கமீலா ஆகியோருடன் பேசிக்கொண்டிருக்கும்போது, தொலைக்காட்சி நேரலையில் தான் இருப்பதை அறிந்தும், அவர் இப்படி கூறினார்.
’அசாதாரணம் இல்லையா, Cop மாநாடு குறித்து பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால், யாரெல்லாம் அதில் பங்கேற்கிறார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.
யார் வரவில்லை என்பது மட்டும்தான் நமக்கு இப்போது தெரியும். இவர்கள் பேசுகிறார்கள், ஆனால், செயலில் எதுவும் இல்லை.
அதை நினைத்தால், உண்மையிலேயே எரிச்சல்தான் வருகிறது’ என்றார் மகாராணியார். அப்போது, எலின் ஜோன்ஸ், உங்கள் பேரனும் அதைக் குறித்துத்தான் பேசியிருக்கிறார் என்றார்.
அதாவது, கோடீஸ்வரர்களான எலான் மஸ்கும், ஜெஃப் பெசோஸும் விண்வெளி சுற்றுலாவில் பிசியாக இருக்கிறார்கள்.
அது குறித்து மறைமுகமாக விமர்சித்த பிரித்தானிய இளவரசர் வில்லியம், விண்வெளிக்குப் போவதில் அர்த்தமில்லை, முதலில் நாம் பூமியைக் காப்பாற்றவேண்டும் என்று கூறியிருந்தார். அதைத்தான் எலின் ஜோன்ஸ் குறிப்பிட்டார்.
வழக்கமாக மகாராணியார் அரசியல் குறித்தோ, புவி வெப்பமயமாதல் போன்ற விடயங்கள் குறித்தோ தனிப்பட்ட முறையில் தன் கருத்துக்களை வெளியிடுவதில்லை.
ஆனால், இம்முறை, தான் நேரலையில் இருப்பது தெரிந்தும் வெளிப்படையாக தனது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளது, பேசியும் எதையும் செயல்படுத்தாத தலைவர்கள் மீதான மகாராணியாரின் கோபத்தையும், புவி மீதான அக்கறையையும் காட்டுகிறது எனலாம்.