மீண்டும் சொதப்பிய சென்னை... ராஜஸ்தான் அபாரம்
மோசமான துடுப்பாட்டத்தால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியடைந்தது.
ரியான் பராக் அதிரடி
இன்று நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், சாம்சன் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் (4), சாம்சன் (20) ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து களமிறங்கிய நிதிஷ் ராணா, ரியான் பராக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிதிஷ் ராணா 36 பந்துகளில் 81 ஓட்டங்கள் குவித்தார். ரியான் பராக் 28 பந்துகளில் 37 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இறுதியில் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ஓட்டங்கள் குவித்தது.
சென்னை தரப்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரச்சின் ரவிந்திரா, ராகுல் திரிபாதி களமிறங்கினர்.
4 பந்துகளை சந்தித்த் ரச்சின் (0 ரன்கள்) ஏமாற்றம் அளித்தார். திரிபாதி 19 பந்துகளில் 23 ஓட்டங்கள் எடுத்து கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அரைசதம் விளாசினார்.
மோசமான ஆட்டம்
மறுமுனையில் ஷிவம் துபே (18), விஜய் சங்கர் (9) ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அரைசதம் விளாசிய கேப்டன் ருதுராஜ் 63 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 11 பந்துகளை சந்தித்த டோனி 16 ஓட்டங்களில் அவுட் ஆனார். ஆட்டத்தின் முதல் பவர் பிளே ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அதேபோல், ஆட்டத்தின் 18வது ஓவரில் 6 ஓட்டங்கள் மட்டுமே சென்னை அணியால் அடிக்க முடிந்தது. இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வெறும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றிபெற்றது. ஜடேஜா 22 பந்துகளில் 32 ஓட்டங்களுடனும், ஓவர்டன் 3 பந்துகளில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |