100 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து பலர் உயிரை காப்பாற்றிய அபார எலிக்கு நேர்ந்த சோகம்!
கம்போடியாவில் 100 கண்ணிவெடிகளை கண்டுபிடித்து கொடுத்த அபார மோப்ப சக்தி கொண்ட எலியான மகாவா உயிரிழந்துள்ளது.
8 வயதான மகாவா கம்போடியாவில் கண்ணிவெடிகளை கண்டறிவதில் திறம்பட செயல்பட்டு வந்தது. தனது பணிக்காலத்தில் 100 கண்ணிவெடிகளை அந்த எலி கண்டறிந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த மகாவா நேற்று உயிர் துறந்தது.
மகாவா எலி ஆப்பிரிக்காவின் டான்சானியா நாட்டில் பிறந்தது. அங்கு வளர்க்கப்பட்டது. அங்கிருந்து கம்போடியாவுக்கு கொண்டுவரப்பட்டு கண்ணிவெடிகளைக் கண்டுபிடிக்கும் பணிக்காகவே பிரத்யேகமாக பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டது.
கம்போடியா நாட்டின் பாதுகாப்புக்காக பல்வேறு பகுதிகளில் சுமார் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகளில் சிக்கி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்ததால், அவற்றை அகற்றுவதற்கு அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்தப் பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவதால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பணிகள் மிகவும் தாமதமாகும் என்பதால், விலங்குகளை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி எலிகளைக் கொண்டு கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு வருகின்றன. அந்தப் பணியில் தன்னை சிறப்பாக இணைத்துக் கொண்டது மகாவா என்ற எலி.
இதன் மிகச் சிறப்பான பணியை அங்கீகரிக்கும் விதமாக பிரித்தானிய விலங்குகள் நல அமைப்பு, எலி மகாவாவுக்கு தங்கப்பதக்கம் வழங்கி கவுரவப்படுத்தியது. அந்த அமைப்பின் 77 ஆண்டுகால வரலாற்றில் எலி ஒன்று தங்கப்பதக்கம் பெற்றது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.