இஸ்ரேல் மீது திடீரென ஹமாஸ் தாக்குதல் நடத்த இதுதான் காரணம்: அமெரிக்க ஜனாதிபதி அளித்துள்ள விளக்கம்
திடீரென இஸ்ரேல் நாட்டின்மீது பாலஸ்தீனிய இஸ்லாமியவாத ஆயுதக்குழுவான ஹமாஸ் ஏன் தாக்குதல் நடத்தியது என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
திடீர் தாக்குதல்
நீண்ட காலமாகவே இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் மோதல்கள் நிகழ்ந்துகொண்டே இருந்த நிலையில், அக்டோபர், அதாவது, இம்மாதம் 7ஆம் திகதி, திடீரென இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர்.
Yahya Hassouna | AFP | Getty Images
அந்த தாக்குதலில் குழந்தைகள் உட்பட 1,400 இஸ்ரேல் குடிமக்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்க, இருபக்கமும் இழப்புகள் மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றில் இரு தரப்பினருக்கும் ஆதரவாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையும் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் மீது திடீரென ஹமாஸ் தாக்குதல் நடத்த காரணம் என்ன?
இந்நிலையில், இஸ்ரேல் மீது திடீரென ஹமாஸ் தாக்குதல் நடத்த காரணம் என்ன என்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார்.
அதாவது, இஸ்ரேல் நாட்டுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையில் நல்லுறவு ஏற்படுவதற்கு இடையூறு செய்வதற்காகவே, இஸ்ரேல் மீது திடீரென ஹமாஸ் தாக்குதல் நடத்தியது என்கிறார் ஜோ பைடன்.
மத்தியக் கிழக்கு பகுதியில் ஆற்றல் மையமாக விளங்கும் நாடு சவுதி அரேபியா. இஸ்லாமியர்களின் இரண்டு புனிதத்தலங்களைத் தன்னகத்தே கொண்டுள்ள சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைன் ஆகிய தனது அண்டை நாடுகள் இஸ்ரேலுடன் உறவை உருவாக்கிக்கொள்வதற்கு ஆசி வழங்கியது.
சவுதியும் இஸ்ரேலை அங்கீகரிக்க விரும்பியதாக தெரிவித்துள்ள ஜோ பைடன், அதை விரும்பாத ஹமாஸ், அதற்கு இடையூறு செய்வதற்காகவே இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியது என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |