பிப்ரவரி 11 முதல் அகதிகளுக்கு இதெல்லாம் கிடையாது... பிரித்தானிய உள்துறை அலுவலகம் தகவல்
பிரித்தானியாவில் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு இனி பற்பசை, சோப் முதலான பொருட்கள் மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படாது என பிரித்தானிய உள்துறை அமைச்சகம் கூறிவிட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தில் பாதுகாவலராக பணி புரிந்தவர் Faiz Mohammad Seddeqi (30).
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்டு அழைத்துவரப்பட்டு பிரித்தானியாவிலுள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளது Seddeqiயின் குடும்பம். ஆறு மாதங்களாக அவர்கள் அந்த ஹொட்லலில் தங்கியிருக்கிறார்கள்.
இந்நிலையில், Seddeqiக்கு பிரித்தானிய உள்துறை அலுவலகத்திலிருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில், பிப்ரவரி 11ஆம் திகதியிலிருந்து, உங்களுக்கு சோப்பு, பற்பசை மற்றும் மருந்துகள் முதலான பொருட்கள் இலவசமாக வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அப்பாயிண்ட்மெண்ட்களுக்காக பயணிக்கும்போது டெக்ஸி கட்டணம் போன்ற செலவுகளையும் தாங்களே கவனித்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் தற்போது 25,000 புகலிடக்கோரிக்கையாளர்கள், 12,000 ஆப்கன் அகதிகள் என மொத்தம் 37,000 பேர் ஹொட்டல்களில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள்.
இவர்களுக்காக நாளொன்றிற்கு பிரித்தானிய அரசு 4.7 மில்லியன் பவுண்டுகள் செலவிடுவதாக உள்துறை அலுவலகம் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.