அகதிகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்திய நாடு: அமைச்சரே வெளியிட்ட ஆதாரம்
கிரேக்க எல்லையில் அகதிகளை அந்த நாட்டின் கடலோர காவல்படையினர் பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்துவதாக பகீர் குற்றச்சாட்டை துருக்கி முன்வைத்துள்ளது.
கிரேக்கத்தில் அகதிகளை அனுமதிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்படுவதாகவும், அகதிகள் மற்றும் புலம்பெயர்வோருக்கு கிரேக்க அதிகாரிகளால் மிக மோசமான அனுபவம் ஏற்பட்டு வருவதாகவும்,
பலரது மொபைல் போன்கள் பறிக்கப்பட்டு, கடுமையாக தாக்குதலுக்கு இலக்காவதாகவும், அவர்களை மிக மோசமாக நடத்துவதாகவும் தொண்டு நிறுவனங்கள் பல தொடர்ந்து புகாரளித்து வருகிறது.
தற்போது இந்த விவகாரத்தில் துருக்கி கவனம் செலுத்தியுள்ளதுடன், கிரேக்கத்திற்கு எதிராக முக்கிய ஆதாரங்களை வெளியிட்டுள்ளது.
துருக்கியின் உள்விவகார அமைச்சர் Süleyman Soylu தமது டுவிட்டர் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டு, கிரேக்க கடலோர காவல்படையினரின் மனிதாபிமானமற்ற செயல் இது என குறிப்பிட்டு,
அப்பாவி அகதிகளை பெட்ரோல் ஊற்றி உயிருடன் கொளுத்துகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார். கிரேக்கத்தின் இந்த அட்டூழியங்களை ஐரோப்பிய ஒன்றியம் கண்டுகொள்ளாமல் இருப்பதன் மர்மம் புரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நார்வே மனித உரிமைகள் அமைப்பின் Tommy Olson, இதை முற்றாக மறுத்ததுடன், அகதிகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் உண்மையில் நடந்ததா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிரேக்க எல்லையில் அகதிகளை மோசமாக நடத்துவது உண்மைதான், ஆனால் பெட்ரோல் ஊற்றி கொளுத்துவது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளதா என்பது சந்தேகமே என தொண்டு நிறுவனம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, துருக்கியின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள கிரேக்கம், பொய் பிரச்சாரங்கள் மேற்கொள்வதை துருக்கி நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.