காபூலில் ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தில் 10 பேர் கொல்லப்பட்ட விவகாரம்: முக்கிய முடிவெடுத்த பைடன் நிர்வாகம்
ஆப்கானிஸ்தானின் காபூலில் 7 சிறார்கள் உட்பட ஒரே குடும்பத்தில் 10 பேர் அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்ட விவகாரத்தில் இழப்பீடு வழங்க பைடன் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த இந்த தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், ராணுவத்தின் கவனக்குறைவே இந்த உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணம் என கண்டறியப்பட்டது.
குறித்த தாக்குதலில் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவரும் 7 சிறுவர்கள் உட்பட அவரது 9 குடும்ப உறுப்பினர்களும் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஐ.எஸ் கொரோசான் தீவிரவாதியின் கார் என தவறாக கருதிய அமெரிக்க ராணுவம் ட்ரோன் மூலம் தாக்குதலை முன்னெடுத்தது.
தற்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளதுடன், எஞ்சிய குடும்ப உறுப்பினர்களை ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவில் குடியமர்த்தவும் பைடன் நிர்வாகம் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் பேச்சுக்களை தாங்கள் நம்ப தயாராக இல்லை எனவும், மன்னிப்புக் கோருவதாக இருந்தால், காபூல் நகருக்கு வந்து அமெரிக்க ராணுவத் தலைமை முகத்திற்கு நேரே மன்னிப்பு கேட்க வேண்டும் என கொல்லப்பட்ட அகமதின் உறவினர், 22 வயது ஃபர்ஷத் ஹைதாரி தெரிவித்துள்ளார்.