ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து... தடாலடியாக சரிந்த எண்ணெய் விலை
அமெரிக்காவும் ஈரானும் நிபந்தனைக்குட்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, உலகளாவிய எண்ணெய் விலைகள் கடுமையாகச் சரிந்துள்ளதுடன் பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டுள்ளன.
கப்பல் போக்குவரத்து
இந்த இரண்டு வார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் முக்கியமாக ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் கப்பல் போக்குவரத்து அனுமதிப்பது உள்ளிட்டவையும் அடங்கும்.

போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதும் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை சுமார் 13 சதவீதம் சரிந்து, ஒரு பீப்பாய்க்கு 94.80 டொலராகக் குறைந்தது. அதேவேளையில், அமெரிக்கச் சந்தையில் வர்த்தகமாகும் எண்ணெய் 15 சதவீதத்திற்கும் அதிகமாகக் குறைந்து 95.75 டொலராக இருந்தது.
ஆனால், பிப்ரவரி 28-ஆம் திகதி மோதல் தொடங்குவதற்கு முந்தைய நிலையைவிட விலைகள் தற்போதும் அதிகமாகவே உள்ளன. அப்போது, ஒரு பீப்பாய் எண்ணெய் சுமார் 70 டொலர் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டு வந்தது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்த நீரிணையைப் பயன்படுத்த முயலும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக ஈரான் மிரட்டியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கிலிருந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், எரிசக்தி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியப் பங்குச் சந்தைக் குறியீடுகள் புதன்கிழமை காலை வர்த்தகத்தில் ஏற்றம் கண்டன. ஜப்பானின் நிக்கேய் 225 குறியீடு 5 சதவீதம் உயர்ந்தது; அதேவேளையில், தென் கொரியாவின் கோஸ்பி குறியீடு ஏறக்குறைய 6 சதவீதம் உயர்ந்தது.
ஹொங்ஹொங்கின் ஹேங் செங் குறியீடு 2.8 சதவீதம் உயர்ந்தது; அதேவேளையில், அவுஸ்திரேலியாவின் ASX 200 குறியீடு 2.7 சதவீதம் ஏற்றம் கண்டது.
செவ்வாய்க்கிழமை மாலையில் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவு ஒன்றில், ட்ரம்ப் குறிப்பிடுகையில் ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் தாக்குதலை இரண்டு வார காலத்திற்கு நிறுத்திவைக்க நான் ஒப்புக்கொள்கிறேன். ஹார்முஸ் நீரிணையை முழுமையாகவும், உடனடியாகவும், பாதுகாப்பாகவும் திறக்க ஈரான் ஒப்புதல் அளித்ததன் அடிப்படையிலேயே இந்த முடிவு எனவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, எந்தவொரு ஒப்பந்தமும் எட்டப்படாவிட்டால், இன்றிரவு ஒரு முழு நாகரிகமே அழிந்துவிடும் என ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில், ஈரான் விதித்துள்ள 10 அம்ச நிபந்தனைகளை மறுப்பேச்சின்றி ட்ரம்ப் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு எதிரான எந்த வகையான தாக்குதலும் நிறுத்தப்படும் என்றால், போர் நிறுத்தத்திற்கு ஈரான் தயார் என்றும், ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து சாத்தியம் என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
ஈரானை மொத்தமாக அழித்தொழிப்பதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்திருந்தாலும், போரைத் தீவிரப்படுத்துவதன் மூலம் எரிசக்தி விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர அனுமதிப்பது குறித்து ட்ரம்ப் கடும் நெருக்கடியில் இருந்திருக்கக்கூடும் என்றே சந்தை தொடர்பில் ஆய்வு முன்னெடுக்கும் நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
மேலும், ட்ரம்பின் செல்வாக்கு அமெரிக்க மக்களிடையே வரலாறு காணாத வீழ்ச்சியில் இருக்க, எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்வு என்பது மிக மோசமான எதிர்வினையை ஏற்படுத்தக் கூடும் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீடித்த அமைதி ஒப்பந்தம்
போர் நிறுத்தம் அமுலில் இருக்கும் இந்த இரண்டு வார காலத்தில், நீரிணைக்கு அருகே சிக்கியுள்ள மேலும் பல எண்ணெய் கப்பல்கள் வெளியேறக்கூடும். இது வரும் வாரங்களில் சந்தைகளுக்கு ஓரளவு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்.
போரின் நெருக்கடியிலும் இந்தியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட ஆசிய நாடுகள், சமீப வாரங்களில் தங்கள் கப்பல்களுக்கான பாதுகாப்பை பேச்சுவார்த்தை மூலம் உறுதி செய்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து, தங்களது கப்பல்கள் பல நீரிணையைக் கடந்துள்ளதாகச் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளது.

ஆனால், போர் நிறுத்தம் ஏற்பட்டிருந்தாலும், மத்திய கிழக்கில் ஒரு நீடித்த அமைதி ஒப்பந்தம் குறித்த நம்பிக்கை ஏற்படும் வரை, அங்கு எரிசக்தி உற்பத்தி முழுமையாக மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது என தகவல் கசிந்துள்ளது.
மேலும், போரை தொடங்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பில் இதுவரை தங்கள் கருத்தை வெளியிடாத வரையில், எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்தம் மீறப்பட வாய்ப்பு உள்ளதாகவே கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |