இன்னும் சில மணி நேரம் மட்டுமே... மாயமான கப்பல் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
இந்தோனேசிய கடற்படையின் மாயமான நீழ்மூழ்கி கப்பல் தொடர்பில் மீட்புக் குழுவினருக்கு முக்கிய தகவல் கிடைத்துள்ளதாக வந்துள்ளது.
இந்தோனேசியாவின் பாலி கடற்பகுதியில் இருந்து 53 பணியாளர்களுடன் மாயமான கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பலில் இனி சில மணி நேரங்களுக்கான ஆக்ஸிஜன் மட்டுமே கையிருப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
அதற்கு முன்னர் கப்பலை கண்டுபிடிக்க முடியாமல் போனால் பிணங்கள் கூட மிஞ்ச வாய்ப்பில்லை என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த நிலையில், மீட்புப் பணியாளர்கள் தங்கள் முயற்சிகளை கப்பலில் இருந்து வெளிவரும் ரேடார் சிக்னலில் செலுத்தியுள்ளனர்.
இதனிடையே, வியாழக்கிழமை மாலை, அடையாளம் தெரியாத, வலுவான காந்த பொருள் ஒன்றை 50 முதல் 100 மீற்றர் ஆழத்தில் கண்டறிந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.
அதிகாரிகளின் கணிப்பின்படி, மாயமான நீர்மூழ்கிக் கப்பலில், ஆக்ஸிஜன் இருப்பு சனிக்கிழமை காலை வரை மட்டுமே நீடிக்கும் என தெரிய வந்துள்ளது.
இன்னொரு தரப்பு, மாயமான நீர்மூழ்கிக் கப்பல் உடைந்திருக்கலாம் எனவும், அது கடலின் 700 மீற்றர் ஆழம் வரை மூழ்கியிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மானிய தயாரிப்பான இந்த நீர்மூழ்கிக் கப்பலானது சம்பவத்தன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தகவல் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும், ஆழ்கடலுக்குள் செல்ல உத்தரவு கிடைத்த பின்னரே, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது அந்த கப்பலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறைந்து வருவதால், அதில் பயணம் செய்த 53 பணியாளர்களும் தற்போது உயிருடன் உள்ளனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.