மிக ஆபத்தான நிலையில் நீர்த்தேக்கம்... பொது மக்கள் வெளியேற உத்தரவு: அவசரகால நிலை பிரகடனம்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கதிரியக்க கழிவுநீர் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீர்த்தேக்கம் ஒன்று உடையும் அபாயத்தில் இருப்பதால் மாகாண ஆளுநர் அவசரகால நிலை பிரகடனம் செய்துள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் வெளியேற ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கதிரியக்க கழிவுநீர் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஒரு பெரிய குளத்தில் குறிப்பிடத்தக்க கசிவு வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கதிரியக்க கழிவுநீரை ஒரு நீர்த்தேக்கத்தில் சேமித்து வைத்திருந்தனர்.
சுமார் 25 அடி ஆழம் கொண்ட இந்த நீர்த்தேக்கத்தில் தற்போது குறிப்பிடத்தக்க கசிவு கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்பகுதியில் உள்ள சுமார் 300 குடியிருப்புகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறவும் மாகாண ஆளுநரால் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீர்த்தேக்கத்தைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பாளர்களுக்கு சனிக்கிழமையன்று குறுஞ்செய்தி எச்சரிக்கை கிடைத்துள்ளது.
ஆபத்தான நிலையில் நீர்த்தேக்கம் இருப்பதால் உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
கசிவு ஏற்பட்டுள்ள பகுதியை சீரமைக்க அதிகாரிகள் தரப்பு முயற்சி மேற்கொண்டும், முடியாமல் போயுள்ளது. தற்போது அந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீரை பத்திரமாக வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.
ஆபத்து கட்டத்தை தாண்டும் அளவுக்கு தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என்றால் 10 முதல் 12 நாட்கள் தேவைப்படும் என கூறப்படுகிறது.
மட்டுமின்றி, கழிவுநீர் வரத்தையும் கட்டுக்குள் கொண்டு வந்தால் மட்டுமே, நீர்த்தேக்கத்தில் இருந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் நீரை வெளியேற்ற முடியும்.
இதனிடையே, கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக, மத்திய புளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள இந்த சுரங்கத்தால் ஏராளமான மனித உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது.

