தாலிபான்களால் கொல்லப்பட்டு அவமதிக்கப்பட்ட இந்திய புகைப்படக்கலைஞர்: அவர் எடுத்த கடைசி புகைப்படம் இதுதான்
தன் புகைப்படங்களுக்காக புலிட்சர் விருது பெற்ற இந்திய புகைப்படக்கலைஞர் ஒருவர் தாலிபான்களுக்கும் ஆப்கன் வீரர்களுக்கும் இடையிலான போரின்போது கொல்லப்பட்ட நிலையில், தாலிபான்கள் அவரது உடலைக் கூறுபோட்டு அவமதித்ததைக் குறித்த ஒரு செய்தி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.
புதுடில்லியைச் சேர்ந்தவரான டேனிஷ் சித்திக்கி (38), ராய்ச்சர்ஸ் பத்திரிகையின் மல்டிமீடியா குழுவின் தலைவர் ஆவார். 2018ஆம் ஆண்டு அந்த பத்திரிகையின் சார்பில் ரோஹிங்கியா அகதிகள் பிரச்சினையை ஆவணப்படுத்தியபோது எடுத்த புகைப்படங்களுக்காக உயரிய விருதான புலிட்சர் விருது பெற்றவர் அவர்.
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்துக்கொண்டிருக்கும் நிலையில், அவர்களிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற ஆப்கன் வீரர்கள் போராடியிருக்கிறார்கள். காந்தஹாரில் தாலிபான்களிடம் சிக்கிய பொலிசார் ஒருவரை ஆப்கன் வீரர்கள் வெற்றிகரமாக மீட்டு திரும்பும்போது, அவர்களுடன் பயணித்த சித்திக்கி உட்பட ஆப்கன் வீரர்கள் சிலர், தாலிபான்கள் ராக்கெட் லாஞ்சர் மூலம் வீசிய குண்டு வெடிப்பு ஒன்றில் சிக்கியிருக்கிறார்கள்.
சித்திக்கியின் உடலை அருகிலுள்ள மசூதி ஒன்றிற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள் அவருடனிருந்த ஆப்கன் வீரர்கள் சிலர். ஆனால், அங்கிருந்து புறப்படும்போது தவறுதலாக சித்திக்கியை அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்கிறார்கள் அவர்கள்.
அதன்பிறகு சித்திக்கியின் உயிரற்ற உடல்தான் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் அவர்களிடமிருந்து சித்திக்கியின் உடல் மீட்கப்பட்டபின் எடுக்கப்பட்ட எக்ஸ்ரேக்களிலிருந்து பல அதிர்ச்சியளிக்கும் விடயங்கள் தெரியவந்துள்ளன.
அதாவது, தாலிபான்கள் சித்திக்கியின் உடலை கூறுபோட்டதும் அல்லாமல், அவரது உடல் மீது வாகனம் ஒன்றையும் ஏற்றி நசுக்கியுள்ளார்கள். அவர் கொல்லப்பட்டபின் அவரது உடல் பலமுறை துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இப்படி கோரமாக கொல்லப்பட்டு சித்திக்கியின் உடலும் அவமதிக்கப்பட்ட விடயம் வெளியாகியுள்ள நிலையில், தாங்கள் சித்திக்கியின் உடலை கண்டுபிடிக்கும்போதே அதில் காயங்கள் இருந்ததாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மானியரான Rike என்ற பெண்ணை மணந்த சித்திக்கி, இரண்டு குழந்தைகளின் தந்தை ஆவார்.
விருது பெற்ற புகைப்படக்கலைஞரான சித்திக்கி, கடைசியாக தான் ஆப்கன் வீரர்களுடன் பயணிக்கும்போது தாக்கப்பட்ட நிலையில், தான் பயணித்த வாகனத்தின் அருகே குண்டு வெடிக்கும் புகைப்படத்தை தான் இறக்கும் முன் கடைசியாக எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.