நாடாளுமன்ற வளாகம் அருகே வெடித்துச் சிதறிய பேருந்து: உடல் சிதறி பலியான பலர்
சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் சாலையோரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடித்ததில் இராணுவ பேருந்து ஒன்று சிக்கி, குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் மூன்று இராணுவ வீரர்கள் காயங்களுடன் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரபரப்பான பாலம் ஒன்றின் அடியிலேயே வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டிருந்துள்ளன.
போக்குவரத்து மிகுந்த காலை நேரத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் குறித்த இராணுவ பேருந்தானது மொத்தமாக சேதமடைந்துள்ளது.
இதனிடையே, மூன்றாவது வெடிகுண்டு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டு, உரிய நிபுணர்களால் செயலிழக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பகல் நடந்த இந்த தாக்குதல் தொடர்பில் இதுவரை எந்த குழுவினரும் பொறுப்பேற்கவில்லை என்றே கூறப்படுகிறது.
டமாஸ்கஸில் 2018ல் ஐஎஸ் தீவிரவாதிகளை சிரியா அரசாங்கம் வெளியேற்றிய பின்னர் இதுபோன்ற குண்டுவெடிப்புகள் அரிதாகிவிட்டன. டமாஸ்கஸ் நகரின் மத்தியில் குறித்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதால், கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும், தாக்குதல் முன்னெடுக்கப்பட்ட பாலமானது, நாடாளுமன்ற வளாகத்திற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது. இப்பகுதியிலேயே அரசாங்க அலுவலகங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மன்ற அதிகாரிகள் பலர் தங்கும் பிரபலமான ஹொட்டல் ஒன்றும் இந்த பாலத்தின் அருகாமையிலே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.